|
|
(இ-ள்.) மெல்லிய மாணிக்கக் கொம்பு போல்வாய்! யான் யாது சொல்லுவேன், தஞ்சைவாணன் வெற்பராகிய தலைவர் நம்மை விரும்பிப் புணர்ந்து பிரிந்துபோய்ப் பின்னானும் மனைக்கண் நீர்வேட்ட காரணம்போலத் தோன்றலும், அவரைக் கண்டவுடன் என்னுடைய அறிவில்லா முகம் நீட்டித்தலின்றி, மதியைக் கண்டு நாணிய பங்கயம்போல, நாணிக் கவிழ்ந்தபடியி னாலே நம் களவை அன்னை யறிந்தாள் என்றவாறு. |
`மென்மாணிக்கம்` என இயையும் கொம்பர் : அண்மை விளி. பேணி - விரும்பி. பாணித்தல் - நீட்டித்தல். நாணல் - குவிதல். |
களவில் தாயறிந்தாள் என்று கூறல் வழுவெனில், வழுவன்று. என்னை, இரவுக்குறியின் இடையீடு பட்டவதனால் வரைதல் வேட்கை தலைவிக்குப் பிறந்தது. பிறக்கவே, பாங்கியொடு வருந்தொழிற்கருமை முதலிய கூறித் தலைவன் வரவை விலக்குவித்தலின், அருமறை செவிலி யறிந்ததாகக் கூறவே, தலைவன் விரைந்து வரைந்துகொள்வனென்று கருதித் தலைவி தானே கூறியதல்லது செவிலியறிந்தா ளல்லளென்று உணர்க. அன்றி அறிந்தாளெனின் வரைவியலில், `செவிலி தலைமகள் வேற்றுமை கண்டு பாங்கியை வினாதல்` என்னும் கிளவிக்கு வழுவாம். அன்றியும், செவிலி வெறி யாடுதல் முதலியனவற்றால் தலைவிக்கு உற்றநோய் யாதோ என்று வினாவினாள் என்று ஆண்டுக் கூறலின், ஈண்டு அறிந்துவைத்து அங்ஙனம் வினாவில் வினாவழு வருமாதலானும் செவிலி அறிந்தாளல்லள் என்றுணர்க. |
(210) |
தலைமகன் வருந்தொழிற் கருமைசாற்றல்: |
தலைமகன் வருந் தொழிற்கு அருமை சாற்றல் என்பது, தலைவி தலைமகன் வருந்தொழிற்கு அருமையைப் பாங்கிக்குக் கூறுதல். |
| ஓவலில் வாயன்னை ஞாளியிவ் வூர்க ணுறங்கினுமூர்க் காவலர் காய்வர் நிலாமதி காலுங் கடுங்குடிஞைச் சேவலும் வாரண முந்தஞ்சை வாணனைச் சென்றிறைஞ்சா மேவலர் போல்வெய்ய வாயடை யாவென் மெலிவறிந்தே
|
(இ-ள்.) ஒழிவில்லாத வாயையுடைய அன்னையும் ஞாளியும் இவ்வூரும் கண்ணுறங்கினும் ஊர்க்காவலர் அயலார் யாரென்று சினந்து திரிவார்கள்; மதி நிலவைக் காலும்; தஞ்சைவாணனைப் போய் வணங்காத பகைவரைப் போல என் மெலிவறிந்து கடிய கூகைச்சேவலும் வாரணமும் வெய்ய வாயடையா என்றவாறு.
|
பாங்கி: முன்னிலையெச்சம். ஓவல் - ஒழிதல். ஞாளி - நாய். காலுதல் - உமிழ்தல். `மதிநிலா` என இயையும். குடிஞை - கூகை. சேவல் - ஆண்புள். வாரணம் - கோழி. `மெலிவறிந்து` என்பதனாற் காரணத்தைக் காரியமாக உபசரிக்கப்பட்டது. |
(211) |