பக்கம் எண் :

கட
195
வரைவு கடாதல்

 
அலரறி வுறுத்தல்:
அலர் அறிவுறுத்தல் என்பது, ஊரில் தலைவியைத் தூற்றும்  அலர்விரிந்த தென்று
தலைவனுக்கு அறிவுறுத்தல்.

  மணிவரை மாளிகை மாறை வரோதயன் வாணன்வெற்பா
பணிமொழி யாளென்னுங் கொள்கொம்பு மூடிப் படர்ந்தயலார்
அணிமனை தோறுங் கொழுந்துவிட் டம்பல் அரும்பிமண்மேல்
தணிவில தாகவிப் போதலர் பூத்ததுன் தண்ணளியே.

     (இ-ள்.) மணிவரை போன்ற  மாளிகையையுடைய  மாறை  வரோதயனாகிய
வாணனது  வெற்பிலுள்ளவனே!  நினது  தண்ணளியாகிய வல்லி தலைவியென்னுங்
கொள்கொம்பை  மூடிப்படர்ந்து,  பக்கத்  தழகிய  மனைதோறும் கொழுந்துவிட்டு,
அம்பலென்னும்  அரும்பை  யரும்பி,  மண்மேல்  தணிவில்லாததாக   இப்போது
அலரென்னும் பூவைப் பூத்தது என்றவாறு.

     மணிவரை - மாணிக்கமலை.   பணிமொழி - மெல்லிய  மொழி.     கொள்
கொம்பு - கொடிபடரக்  கொள்ளுங்  கொம்பு.  அம்பல் என்பது சொல் நிகழாதே
முகிழ்  முகிழ்த்துச்  சொல்வதாயிற்று.  இன்னதின்  கண்ணது  என்பது    அயல்
அறியலாகாது  என்பது. அலர் என்பது, இன்னானோடு இன்னாளிடையது போலும்
பட்டது  என்  விளங்கச்  சொல்லி  நிற்பது. என்னை, 1`அம்பலு மலருங் களவு`
என்னும் இறையனார் அகப்பொருட் சூத்திர வுரையிற் கண்டுகொள்க. இச்செய்யுள்,
`இயைபுருவகம்` எனக்கொள்க.
(229)    
தாயறிவுணர்த்தல்:
     தாய்  அறிவு  உணர்த்தல்  என்பது, இக்களவைத் தாய் அறிந்தாள்  என்று
தலைவற்குக் கூறுதல்.

  திரையிற் பவளம் முகத்தெழுந் தீக்கொழுந்தின்
கரையிற் படருங் கடற்றுறை நாட கயற்கொடி பொன்
வரையிற் றிகழ்வித்த வாணன்தென் மாறை மலர்ந்தமௌவல்
விரையிற் களவையெல் லாமறிந் தாளன்னை மெய்யுறவே.

     (இ-ள்.) பவளக்கொடி     திரையால்,     வடவாமுகக்     கனலிலெழுங்
கொழுந்துபோலக்,  கரையிலே  படருங்  கடற்றுறை  நாடனே!  கயற் கொடியைப்
பொன்மலையிலே  விளக்குவித்த  வாணன்  தென்மாறை  நாடன் த  லைவிக்குச்
சூட்டிய  முல்லைமாலை மணத்தினாலே  அன்னை  களவையெல்லாம்  உள்ளபடி
யறிந்தாள் என்றவாறு.

     எனவே, களவொழுக்கத்தில் ஒழுகற்பாலையல்லை  யென்று  கூறியதாயிற்று.
திரை - அலை. இன் இரண்டும் மூன்றனுருபு. என்னை,

1. இறையனார் அகப்பொருள் - 22.