|
அஃதாவது, தெய்வத்தாற் கூடுதலும் தலைவியாற் கூடுதலும் என இரு வகைப்படும். செய்யுட்பாடுவார் தெய்வப் புணர்ச்சி பாடுவாருமுளர்; தலைவியிற் புணர்ச்சி பாடுவாருமுளர்; இவ்விரண்டிற்கும் இயற்கைப் புணர்ச்சியென்று பெயர் கூறப்படும். அவற்றுள் இச் செய்யுள் தலைவியிற் புணர்ச்சியாய இயற்கைப் புணர்ச்சி1 என்க. |
| 2`வேட்கை யுணர்த்தல் மறத்தல் உடன்படல் கூட்டமென் றிறைவியிற் கூட்டநால் வகைத்தே`
|
என்னுஞ் சூத்திரவிதியால், இயற்கைப்புணர்ச்சி நான்கு வகைப்படுமெனக் கொள்க. அவை வருமாறு: |
இரந்து பின்னிற்றற் கெண்ணல்: |
இரந்து பின்னிற்றற் கெண்ணல் என்பது, தலைவன் தலைவியை இரந்து பின்னிற்றற் கெண்ணல். பின்னிற்றல் என்பது ஒரு சொல். அதற்குப் பொருள் இதஞ்சொல்லுதல்.
|
| தேங்கிய காதர வாதரஞ் செப்பித்தண் செப்பிணைபோல் வீங்கிய மாமுலை மேவுதும் யாம்விச யக்கொடிமேல் வாங்கிய சாபம் உயர்த்தவன் போர்வென்ற வாணன்வையம் தாங்கிய மாலனை யான்தஞ்சை சூழ்வரைத் தாழ்குழற்கே.
|
(இ-ள்.) நெஞ்சமே, வெற்றிக்கொடிமேல் வளைவில்லை யுயர்த்தவனாகிய சேரனது போரை வென்ற வாணன் வையந்தாங்கிய மாலுக் கொப்பானவன். தஞ்சையைச் சூழ்ந்த வரையிலிருக்குந் தாழ்ந்த குழலினை யுடையாட்கு நிறைந்த அச்சந்தரும் ஆதரத்தைச் சொல்லி, தண்ணிய செப்பிணைபோற் பூரித்த பெரிய முலையிடத்து யாம் கூடுதும் என்றவாறு.
|
காதரம் - அச்சம்; வடசொல். ஆதரம் - காதல். தாழ்குழல்: அன்மொழித் தொகை. நெஞ்சம்: முன்னிலையெச்சம். (5)
|
இரந்து பின்னிலை நிற்றல்: |
இரந்து பின்னிலை நிற்றல் என்பது, தலைவியை யிரந்து இதஞ்சொல்லுதல், நிலையாகப் பின்னிற்றல் என்று மாறிக் கொள்க. |
|
|
(பாடம்) 1. என்று கொள்க. 2. அகப்பொருள் விளக்கம், களவியல் - 10.
|