பக்கம் எண் :

160

கங்கையின் திருப்புதல்வன், கணபதிக்கு இளையஒரு மெய்ஞ்ஞான தேசிகன்
- விநாயகருக்குப் பின் பிறந்த ஒப்பற்ற மெய்ஞ்ஞான குரு, ஆவினன்
குடியினான் - ஆவினன் குடியில் வாழ்வோன், பன்னரிய புல்வயலில் வால
குமரேசன்மேல் - (ஆகிய) புகழ்தற்கடங்காத திருப்புல்வயலில் வாழும் பால
குமரக்கடவுள் திருவடிக்கு, பரிந்து - விரும்பிய, பாங்கான தமிழ் ஆசிரிய
விருத்தத்தின் - அழகிய தமிழில் ஆசிரிய விருத்தமென்னும் பாவினத்தால்,
குருபாததாசன் அறைபாடல் ஒருநூறும் - குருபாததாசன் என்னும் அடியேன்
பகர்ந்த நூறு செய்யுளையும், நாடி நன்னயமதாகவே படித்தபேர் - ஆராய்ந்து
விருப்பத்துடன் படித்தவர்களும், கேட்ட பேர் - கேட்டவர்களும், நாள்
தொறும் கற்றபேர்கள் - ஒவ்வொரு நாளும் பிழையறப் படித்தறிந்தவர்களும்,
ஞானயோகம் பெறுவர் - ஞானத்தை நல்கும் யோகத்தை அடைவார்கள்;
பதவி யாவும் பெறுவர் - எல்லாப் பதவிகளையும் அடைவார்கள்;
நன்முத்தியும் பெறுவர் - நல்ல வீடுபேற்றையும் அடைவார்கள்.

     (கருத்து) குமரேசசதகத்தைப் படித்தவர் முருகனருளால் எல்லா
நன்மைகளையும் இனிதே பெறுவர்.                       (100)

குமரேசசதகம் மூலமும் உரையும்
முற்றும்.