பக்கம் எண் :

45

கொங்கு மண்டிலத்து இளங்கோவாகிய கோசரும், நங்கைக்கு அங்ஙனஞ்
சாந்தியும் விழவுஞ் செய்தலால் அவை நீங்குதலோடே மழைபெய்தற்றொழில்
பெய்யும் நாளென்றும் வழுவாதாயிற்று என்பதனாலறிக.

                        குமணன்

41.



நாட்டினைத் தம்பி கொளக்காடு சென்று நலிவுறுநாள்
பாட்டிசைத் தோர்புல வன்வேண்ட வென்றலை பற்றியறுத்
தீட்டியென் றம்பி யிடத்தீயிற் கோடிபொ னெய்து மென்று
வாட்டங் கைத்தரு மக்குமணன் கொங்கு மண்டலமே.

     (க-ரை) நாட்டைத் தம்பி வசம் விட்டுக் காட்டிற் சென்றுள்ள காலத்து
ஒரு புலவன் பாடிப் பரிசு கேட்க, என் தலையை அறுத்துத் தம்பியிடம்
கொடுத்தால் கோடி பொன் கொடுப்பன் என்று தன் வாளாயுதத்தைக்
கொடுத்த குமணனுங் கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு : குமணன் முதலெழு வள்ளலிலொருவன். புலவர்கள்
பாடலுக்கும் மற்றை அறநெறிக்கும் பொருளீந்து பெரும் புகழ் பெற்றான்.
இது பொறாத தம்பியிடம் அரசுரிமையைக் கொடுத்துக் காட்டுக்குச்
சென்றான். பெருந்தலைச் சாத்தனார் அங்குச் சென்று பாடினார். ஐயா
புலவரே! என் தலையைக் கொண்டு வருபவர்களுக்குக் கோடி பொன்
தருவதாகத் தம்பி அமணன் பறை சாற்றியிருக்கிறான். இந்த வாளாயுதத்தால்
வெட்டி என் தலையைக் கொண்டுபோய்க் காண்பித்துப் பொன்னைப்
பெற்று உம் வறுமையை நீக்கிக் கொள்க என இரந்து வேண்டி வாளைக்
கொடுத்தான். இதற்கு உடன்படாத புலவர் மாந்தை நகர் சென்று குமணன்
தலைபோல பொய்த்தலை ஒன்று சிற்பியாற் செய்வித்துக் கொண்ட
இளங்குமணனிடங் கொடுத்தனர். அண்ணன் தலையைக் கண்டவுடன் மெத்த
மன வருத்தங்கொண்டு புலம்பினன். வருந்தேல் என்று அழைத்துப் போய்க்
குமணனைக் காட்டினர். மகிழ்ந்தனன். துணைவர் நட்பாயினர். புலவர்
விரும்பிய பொருளீந்தனர்; (பெருந்தலைச் சாத்தனார் பாடியது)