பக்கம் எண் :

390நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

பிற்று; வாட்டிற்று; கீழேவீழ்ந்தான் : இறந்தான். இது உளநூல் இயல்பும் கட்பார்வையின் திட்பமும் உணர்ந்தோர் நன்கறிவர். கண்ணொளி ஆற்றலை, மறைமலையடிகள் ஆக்கிய ‘மனித வசியம்’ என்னும் உரைநடை நூலில் ‘கண்’ என்னும் பகுதியில் விரிவுபடக் காண்க. தன் கற்புத் திண்மையால் நெருப்பூட்டி மதுரைமாநகர் எரித்த கண்ணகியார் வரலாற்றாலும் உணர்க. இத்துன்ப நிலையை, இவ்வரிய பெரிய நிகழ்ச்சியை ‘விழித்தாள் சிலைவேடன்...............நீறாய் விழுந்தான்’ என்னும் சொற்றொடரினால் அமைத்தார் ஆசிரியர். (132)

தமயந்தி, தன் ஊழ்வினையை, நினைந்து அழுதல்

311. வண்தமிழ்வா ணர்ப்பிழைத்த வான்குடிபோல் தீத்தழல்மீ
மண்டு கொடுஞ்சுரத்தோர் மாட்டிருந்து - பண்டையுள
வாழ்வெல்லாம் தானினைந்து மற்றழுதாள் மன்னிழைத்த
தாழ்வெல்லாம் தன் தலைமேல் தந்து.

(இ - ள்.) தீதழல் மீமண்டு கொடும் சுரத்து ஓர் மாடு இருந்து - கொடிய வெப்பமானது மேலெழுந்து நெருங்கி எழுகின்ற கொடுமைமிக்க பாலைவனத்தில் ஒருபக்கமாக இருந்து கொண்டு, மன் இழைத்த தாழ்வு எல்லாம் தன் தலைமேல் தந்து-(தனக்கு) நளனால் செய்யப்பெற்ற குறைபாடுகள் எல்லாம் தன் தலைவிதிப் பயனெக் கருதி (அவனை நோவாமல்), வண்தமிழ்வாணர் பிழைத்த வான்குடிபோல் - வளப்பமிக்க செந்தமிழ்ப் புலவர்கட்குத் தவறிழைத்த உயர்குடிப் பிறந்தவர்கள் பின் வறுமையால் வருந்துவதுபோல, பண்டைஉள வாழ்வு எல்லாம் தான் நினைந்து அழுதாள் - முன் வாழ்ந்திருந்த தன் வாழ்க்கை நிலையை யெல்லாம் ஒவ்வொன்றாக எண்ணி யெண்ணி அழுவாளாயினாள்.

(க - து.) தமயந்தியானவள், அப் பாலைவனத்தில் ஒரிடத்திலிருந்து தான் முன்பு வாழ்ந்திருந்த செல்வ நிலைகளையெல்லாம் ஒவ்வொன்றாக நினைந்து நினைந்து அழுவாளானாள் என்பதாம்.

(வி - ரை.) வண்தமிழ் - என்றும் சீரிளமைத் திறங்குன்றாத செந்தமிழ் மொழி. வாணர் - அதைக்கொண்டு வாழ்வோர் என்னும் பொருளாய்ப் புலவர்களைக் குறித்தது. அவருக்குப் பிழை செய்தவர்கள், எவ்வளவு செல்வராயினும் கெடுவர் என்பதைக் கருத்தாகக் கொண்டு ஆசிரியர் கூறினார். என்னை? கற்றுத்துறை போய புலவர்பெருமக்கள், உலகமக்கள் யாவரும் இன்புற்று