பக்கம் எண் :

424நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

(வி - ரை.) போது - பொழுது என்பதன் விகாரம். அது, மக்கள் யாவரும் துயில் நீங்கி யெழுந்து நீராடிக் காலைக்கடன் முடித்து ஆண்டவனை மன மொழி மெய்களால் நினைத்தலும் வாழ்த்தலும் வணங்கலும் ஆகிய வைகறைப் பொழுது. எப்போதும் நினைக்க வேண்டும் ஆண்டவனை என்பதற்காகவே பொதுச் சொல்லாகப் ‘போது’ என்றார்.

‘நின்றும் இருந்தும் கிடந்தும் நினைநெஞ்சே
என்றும் சிவன்தாள் இணை’

எனவும்,

1‘நெக்கு நெக்குள் உருகி உருகி
நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி’

எனவும் கூறுவர் பெரியோர். அந்த முறையில் சைவ நன்னெறிக்கு வெளி அடையாளமாகக் கொள்ளப்படுவது, திருநீறும் உருத்திராக்கமும். உள்ளடையாளமாக அமைவது, திருவைந்தெழுத்து. இங்கே திருநீற்றையும் திருவைந்தெழுத்தையும் உரைத்தார். திருநீறணிவதன் உண்மை உயர்ந்த கருத்தான் அமைந்தது. அதுவும் வெண்ணிற நீறே அணிதல் வேண்டுமென்பது, நிறங்களிலெல்லாம் உயர்ந்தது வெண்மை நிறமே. இதனானே ஒளவை மூதாட்டியாரும் 2‘வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை’ என்றருள்வாராயினார். வெண்ணீறு, அழுக்காறு அவா வெகுளி கடுஞ்சொல் முதலியன நீங்கி ஓரறியுயிர்களிடத்தும் இரக்கமுள்ளவராக இருக்கின்றேம் ; எவ்வுயிரும் ஆண்டவன் திருமுன்பு ; உயிர்கள் உறையும் உடலெல்லாம் இறைவன் கோயில் எனக் கொள்ளும் தன்மையுடையேம் ; எனவே, அத்தகைக் கொள்கையுடைய இறைக்கு அடியேம் எனக்கொண்டு ஒழுகும் நெறிக்குவெளி அடையாளமே, திருநீறணிதல். அன்றியும் எத்துணைக் காலம் நோய் நொடி இன்றிச் செல்வத்திற் சிறந்து வாழினும் இறப்பு வருவது தவறாதது ; உண்மை.

3‘முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவதும் கண்டு’

என்றருளினார் பாரனைத்தும் பொய்யெனவே கண்டுணர்ந்து துறந்து பட்டினத்தடிகளாரும். எனவே உடலின் தன்மையை வெந்து நீறாகும் நிலையை உடல் முதலியன நிலையாமையை நினைப்பூட்டி நல்ல வழியில் மனஞ் செல்வதற்கு நினைவுக் குறியாகக்

1. திருவாசகம், புணர்ச்சிப்பத்து : 8.
2. கொன்றைவேந்தன் : 3. பட்டினத்தார்பாடல் : 48.