பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்33


சந்த விருத்தம்
12.
கடகளி றுதவுக பாய்மிசைப் போர்த்தவள்
   கவிகுவி துறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயி றெரியவொள் வேலினைப் பார்த்தவள்
   கடிகமழ் தருமலர் தார்முடிச் சேர்த்தவள்
இடியுக வடலரி யேறுகைத் தார்த்தவள்
   எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொ டுழுதெழு பாரினைப் பேர்த்தவள்
   எனுமிவ ரெழுவர்க டாண்முடிச் சூட்டுதும்
குடமொடு குடவியர் பாணிகைக் கோத்திடு
   குரவையு மலதொர்ப ணாமுடிச் சூட்டருள்
குதிகொள நடமிடு மாடலுக் கேற்பவொர்
   குழலிசை பழகளி பாடிடக் கேட்டுடை

    12. (சந்தக் குழிப்பு.) தனதன தனதன தானனத் தாத்தன.

    (அடி, 1) கபாய் - சட்டை; “கம்பக் கடரக் களிற்றின் கபாயணிந்த” (505.) போர்த்தவள்: மாகேசுவரி. கவி குவிதுறுகலின் - குரங்குகள் குவித்த உருண்டைக் கற்களால். வாரியை - சமுத்திரத்தை. தூர்த்தவள்: நாராயணி. வயிறு - நடுவிடம். பார்த்தவள்: கௌமாரி. தருமலர் - கற்பகத்தின் மலரை. சேர்த்தவள்: இந்திராணி.

    (2) அரியேறு - ஆண் சிங்கம். ஆர்த்தவள்: காளி. எழுதரு - எழுதுதற்கரிய. கூர்த்தவள் - மிக்க ஊக்கத்தையுடையவள்; அபிராமி. பேர்த்தவள்: வாராகி. தலைவர்கள் செயல்களை அவர்கள் சக்திகளுக்கும் கூறுதல் மரபாதல் பற்றி எழுமகளிர் செயல்கள் இங்கே இங்ஙனம் கூறப்பட்டன.

    (3) குடமொடு - குடமென்னும் கூத்தோடு; குடக்கூத்தென்பது திருமாலுக்குரியது; விநோதக் கூத்தின் வகையுள் ஒன்று; அதற்குரிய உறுப்புக்கள் ஐந்து; அக்கூத்தாவது தலையிலே அடுக்குக்குடம் இருக்க, இரண்டு தோள்களிலும் குடம் இருக்க, இரண்டு கைகளிலும் குடங்களை ஏந்தி ஆகாயத்திலே எறிந்து ஆடுவதென்பர். குடவியர் - கோவியர். பாணி - கைகளை. குரவை - குரவைக்கூத்து. ஓர் பணாமுடிச் சூட்டென்றது காளியனது முடியை. நடமிடுதல் - நர்த்தனம் செய்தல். குழல் - வேய்ங்குழல். அளி - வண்டு; “குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட” (மணி. 4;3.)