பக்கம் எண் :

348குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

இன்னருள் பழுத்த சந்நிதி சேர்ந்துழி     
இருவேம் பெற்றது மொருபே றாகலின்     
30
வேற்றுமை யுளதோ வில்லை     
ஆற்றசால் சிறப்பி னனையரோ டெனக்கே.    
(5)

நேரிசை வெண்பா
455.
ஓட்டுவிக்கக் கூட்டினைவிட் டோடும் பொறியரவைந்     
தாட்டுவிக்குஞ் சித்தர்நீ ரானக்காற் - கூட்டமிட்டு     
மன்றாடு மும்மையொரு மாசுணநின் றாட்டுவிக்க     
நின்றாடு கின்றதென்கொ னீர்.    
(6)

கட்டளைக் கலித்துறை
456.
நீருண்ட புண்டரி கத்துணைத் தாணிழற் கீழ்ப்பொலியும்
சீருண் டடித்தொண்டு செய்யா வெனக்குஞ்சிற் றம்பலத்தெம்
காருண்ட கண்டனைக் கண்டன னாலக் கடலமுதம்
ஆருண் டனர்மற் றவரெவ ரேனு மமரர்களே.        
(7)

“மாயனன் மாமணி கண்டன் வளர்சடை யாற்கடிமை, யாயின தொண்டர் துறக்கம் பெறுவது சொல்லுடைத்தே, காய்சின வானை வளருங் கனக மலையருகே, போயின காக்கையு மன்றே படைத்தது பொன்வண்ணமே” (பொன்வண்ணத். 100); “மாலிமயப், பொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்குருங் காக்கையும் பொன்னிறமாம, யிருக்கும்” (யா. கா. அவையடக்கம், 3).

    (29-31) இருவேம் - தவப்பெருந்தொண்டரும் அடியேனும், தவப்பெருந் தொண்டர் பன்னாள் முயன்று தவஞ் செய்தமைக்கும், யான் சிறிதும் முயலாது தரிசனமாத்திரம் செய்தமைக்கும் பயனில் வாசியில்லை யென்றவாறு.

    455. ஓட்டுவிக்க - மனத்தைப் பல வழிகளில் ஓடச்செய்ய. கூடு - தேகம். பொறியரவு - இந்திரியங்களாகிய பாம்புகள் (சீவக. 375,) புள்ளிகளையுடைய பாம்பு; சிலேடை. மன்றில் ஆடும் ஒரு மாசுணமென்றது பதஞ்சலியை. அவர் பொருட்டுச் சிவபெருமான் நடனம் புரிந்தருளினரென்பது தல வரலாறாதலின், ‘ஒரு மாசுண நின்றாட்டுவிக்க’ என்றார் (470); “பதஞ்சலிக் கருளிய பரம நாடக” (திருவா.) பொறியரவு: 468. ஐந்து பாம்புகளை ஆட்டுவிக்கவல்ல சித்தராகிய நீர் ஒரு பாம்பு நின்று ஆட்டுவிக்க ஆடுவது என்ன வியப்பென்றபடி. பாம்பாட்டு சித்தரெனச் சித்தர்களில் ஒருவகையார் உண்டு.

    456. நீருண்டவென்றது புண்டரிகத்துக்கு அடை. புண்டரிகம் - இங்கே, செந்தாமரை; தக்க. 22, உரையைப் பார்க்க. தாணிழற்கீழ்ப் பொலியும் சீராவது வீடுபெறுதல், திருத்தாளே வீடாதலின் (முருகு. 62-3, ) எனக்கும் சீருண்டு; உம்மை இழிவு சிறப்பு. அக்கடலமுதம்: அகரம் பண்டறி சுட்டு; உலகறிசுட்டுமாம். அமுத்ததை ஆருண்டாலும் அவர்கள் இறவாமை நீங்கி அமரராதல்போல இறைவன் தரிசனத்தை யார் பெறினும் அவர் வீடு பெறுவரென்றவாறு.