முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
தவம். கட்டளைக்கலித்துறை
குன்றா மறையுள் விபூதியென் றேசொலுங் கூற்றினுக்குப்
பொன்றாத செல்வ மெனப்பொருள் கூறும்வன் பூசுரரும்
தன்றா மரைமலர்க் கைந்நீறு சாற்றத் தவம்புரிவர்
என்றா லெவர்சிவ ஞானிதன் மேன்மை யிசைப்பவரே.
(41)
புயவகுப்பு
இசைபோகி மாழ்கமத னம்பைக் கடிந்தன
       விளநாக வீருரியொ டென்பைத் துரந்தன
வசைபோகு மாரநிகர் கண்டிக் கிசைந்தன
       மகமேரு வாதிவரை யஞ்சக் கிளர்ந்தன
நசைபோகு மாதவர்க டுன்பைத் துரந்தன
       நயநீறு தேய்வையென விஞ்சத் திமிர்ந்தன
திசைபோகு தூயதமிழ் தங்கப் புனைந்தன
       சிவஞான தேசிகர்தம் வென்றிப் புயங்களே.
(42)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
புயன்மறையா மயிலைமலைச் சிவஞானி நீயேயெம்
       பொருளிற் கொண்ட
செயன்மறையா விளவேறு கரந்தவன்யா னலனென்னிற்
       றெளியச் சொல்வேம்
அயன்மறையா நின்னடிகண் டனமார வாரங்க
       ளாகா துன்றன்
இயன்மறையா துரைசெய்தி செய்திலையே லலர்தூற்ற
       விளைக்கி லேமே.
(43)
மேற்படி வேறு
இளைக்கு மிடியற் குறபொருளா மிறைவற் கரசாங் கூற்றுவனை
விளிக்கும் பிணிக்கு மருந்தாகும் விடத்திற் கருஞ்சீர்க் கலுழனாம்
வளைக்கும் பகைக்குப் படையாகு மலடர்க் கரிய மகவாகுந்
திளைக்குங் கருணைச் சிவஞான தேவன் றிருக்கைத் திருநீறே.
(44)

41. குன்றாமறை-பெருமையுடைய நான்மறை. பொன்றாத-கெடாத. 42. மதனம்பு-காமன்கணை. நாக ஈருரி-யானைத்தோல். துரந்தன-நீக்கி விட்டன. வசைபோகும்-வசைநீங்கிய. கண்டி-சிவமணிக் கண்டிகை. கிளர்ந்தன-மேலாக எழுந்தன. நசைபோகும்-ஆசைவிட்ட. திமிர்ந்தன-பூசின. 43. கரந்தவன்-மறைத்தவன். ஆரவாரம்-பெருமித தடக்கை. 44. மிடியற்கு-வறுமை யுடையவர்கட்கு. விளிக்கும்-அழைக்கும்.கலுழன்-கருடன்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்