முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
கட்டளைக்கலித்துறை
கிழவி யெனுமிக் கிரிராச கன்னிகை கெண்டையங்கண்
அழவி மலனைத் தழுமூ ரமர்ந்த வமுதமுனி
தொழவி கலமி லுயர்ஞானங் கூறுஞ் சுடரிலைவேற்
குழவி தனினு முனையே விரும்புங் குடமுனியே.
(47)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
குடக்கெனப் படாக்கு ணக்குங் குணக்கெனப் படாக்கு டக்கும்
வடக்கெனப் படாத தெற்குந் தெற்கெனப் படாவ டக்கும்
நடக்குமெய்ப் புகழ்மா கச்சி நகர்சிவ ஞான தேவே
படைக்குமப் பெரியோன் றன்னைப் பரவுவார் பரவு வாரே.
(48)
பன்னிருசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
பரம யோகி யென்றுடம்பிற் பாதி யொருத்தி கொளக்கொடுத்துப்
       பகர்வுற் றறநன் மகனையடும் பாத கத்திற் குடன்படுத்தித்
தருமி தானென் றெருதேறிச் சாந்த னென்று புரமெரித்துத்
       தம்பி ரானென் றொருவற்குச் சந்து மகளிர் பானடந்து
பெருமை யாள னென்றுபோய்ப் பேய்க்கூத் தாடிச் சின்மயனாம்
       பெயர்பெற் றவையி னம்பியாற் பித்த னாகிப் புனிதனெனாச்
சிரமு மாலை என்புமரீஇத் திரிந்த முரண்கொள் செயலெல்லாம்
       தீர்வான் வந்த சிவஞான தேவற் கிலையொப் பாவாரே.
(49)
பதினான்குசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
வாரியங் கரையீர் வாளிலைக் கைதை
       மலரெனத் தோன்றுவர் சிலர்தாம்
மதுரவீர்ங் கரும்பின் மலரெனச் சிலர்தாம்
       வருவர்நீ கற்பக மலர்போல்
காரியங் களத்த னடஞ்செய்தா மரையின்
       கழலொளி யாவுமூர் போகி
கண்களாற் கண்டு கேட்டுமூர்ப் பச்சைக்
       கந்தமா முனிகரத் துதித்தாய்
வேரியங் கமலத் தாளிழை மருங்குன்
       மெல்லியற் பெண்ணொரு கம்பம்
மேவுற விருமா தங்கமுங் கட்டி
       விடாதமர் நகர்கணா யகமும்
பாரினன் முகமா மிக்கரை முனிந்த
       பரன்றிரு வக்கரை நகரும்
பயிலிட மெனக்கொண் மயிலைவா ழமுத
       பானமார் ஞானமா தவனே.
(50)

47. கிரிராச கன்னிகை-மலையரையன் மகளாகிய உமாதேவி அமுதமுனி-சிவஞான பாலையர். சுடரிலை வேற்குழவி-முருகக் கடவுள். குடமுனி-அகத்தியன். 48. குடக்கு-மேற்கு. குணக்கு-கிழக்கு. 49. ஒருத்தி-உமையவள். சந்து-தூது. மகளிர்-பரவை நாச்சியார். நம்பி-சுந்தரர். மரீஇ-பொருந்தி. முரண்கொள் செயல்-மாறுபட்ட செய்கை. 50. வாரியங்கரை-கடற்கரை. வாள் இலை-வாளைப் போன்றஇலை. கைதை-தாழை. வேரியங்கமலம்-தேன்பொருந்திய தாமரை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்