முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
2. நால்வர் நான்மணி மாலை
கட்டளைக்கலித்துறை
வீட்டிற்கு வாயி லெனுந்தொடை சாத்துசொல் வேந்தபொது
ஆட்டிற்கு வல்ல னொருவற்கு ஞான வமுதுதவி
நாட்டிற் கிலாத குடர்நோய் நினக்குமுன் னல்கினுமென்
பாட்டிற்கு நீயு மவனுமொப் பீரெப் படியினுமே.
(2)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
படியிலா நின்பாட்டி லாரூர
     நனிவிருப்பன் பரம னென்ப
தடியனே னறிந்தனன்வான் றொழுமீச
     னினைத்தடுத்தாட் கொண்டு மன்றித்
தொடியுலா மென்கைமட மாதர்பா
     னினக்காகத் தூது சென்றும்
மிடியிலா மனைகடொறு மிரந்திட்டு
     முழன்றமையால் விளங்கு மாறே.
(3)
நேரிசையாசிரியப்பா
விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட்
காரண னுரையெனு மாரண மொழியோ
ஆதிசீர் பரவும் வாதவூ ரண்ணல்
மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ
யாதோ சிறந்த தென்குவீ ராயின்
வேத மோதின் விழிநீர் பெருக்கி
நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம்
திருவா சகமிங் கொருகா லோதிற்
கருங்கன் மனமுங் கரைந்துகக் கண்கள்
தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய
மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
அன்ப ராகுந ரன்றி
மன்பதை யுலகின் மற்றைய ரிலரே.
(4)

2. வாயில்-ஏது. நல்கினும் பாட்டில் எவ்விதத்தாலும் நீயும் அவனும் ஒப்பீராகலின் இங்ஙனம் ஈந்தமையாற் பயன் என் என்பது. நாட்டிற்கிலாத எனல் தாப்பிசை. பொது ஆட்டிற்கு-மன்றில் கூத்தியற்றுதற்கு. 3. படி-ஒப்பு. வான்-வானுலகத்தவர், பரமன் விருப்பனென்பது விளங்குமாறு அறிந்தனனென்க. அறிந்தனனென்பது பிரதிக்ஞை, கொண்டும் சென்றும் இட்டும் உழன்றமையாலென்பது ஏது. தொடி-வளையல். மிடி-வறுமை. 4.வேதம் பல்காலோதினும் சிற்றன்புடையராதலும் அரிதென்பதூஉம் திருவாசக மொருகாலோதினும் பேரன்புடையராதல் எளிதென்பதூஉம் விளக்கியவாறு. கேணி என்பது நெய்தனிலத்து நீருக்காகத் தோண்டப்படும் சிறு கிணறு. இக்கேணிஇடையறாது நீர் சுரந்துமக்களை உண்பிக்கும். இதுபோலவே கண்ணீர்வார ஆண்டவன் அருள் சுரந்துமக்களை உய்விக்கும் என்க. மன்பதை-மக்கட்பரப்பு. மற்றையர்-ஈண்டு அன்பராகாதவர். கரைந்துக-கரைந்துசிந்த. மன்பதை உலகு-மக்கட் பரப்பையுடைய உலகம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்