பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


115


நடிக்கும் சிறு பிள்ளைகள் போன்று, நடுவுநிலைமையதாகக் கற்றகல்வியும், (அதனாற் பெற்ற) நல்லுணர்வும் நல்ல நிலைக்களமாக நினைந்து;

    "நானென்று - உரித்தாவனோ" - நானென்றும் நீ யென்றும் வேறுபட நிற்கும் நிலை (புணர்ந்த நம்முள் ஒன்றாவதன்றி)யாகி இரண்டில்லை என்று துணிந்து நிற்க, நடுவாக முளைத்தெழுந்த (இனம் வேறான) வடுவுறும் மனத்தைக் கட்டியடக்கி என் வழி நிற்பிக்க வழியறியாமலே (எளியேன்) நனிமிகவாடி வருந்தினேன். உன்னுடைய பேரருட் பெருநிலைக்குச் சிறியேன் தகுதியாகும் நாள் எந்நாளோ?

        "கருதரிய . . . கடவுளே"

     (வி - ம்) மருளர் - மயக்கமுடையோர். பட்சம் - பகுதி. கோத்த - அடக்கிய; விழுங்கிய. பரமவெளி - மேலான அருள்வெளி.

    சிற்றில் புனைந்து விளையாடுதலும், சிறுதேருருட்டலும் அப்பொழுது நடிப்பேயாயினும் அவர்தம் பருவ காலத்து மெய்யாகக் கைக்கொண்டொழுகும் விழுமிய ஒழுகலாற்றிற்கு அடிப்படையாம். எனவே நடிப்பனைத்தும் உலகிடை நிகழும் மெய்ந்நிகழ்ச்சிகளைப் பிறர் உண்மையுணர்ந்து அல்லன ஒரீஇ நல்லன கடைபிடித்து ஒழுகி நல்வாழ்வு எய்துதற்பொருட்டுப் பொய்யாக நடிப்பதாம். அதனால் அந் நடிப்புப் பயனில் செயலாகாது.

    'நானென்றும் நீயென்றும்' எஞ்ஞான்றும் இரண்டில்லை என்பதன் பொருள் ஆவியும் ஆண்டானும் மேவி ஒன்றாங் கலப்பு நிலையில் இரு பொருளாய் வேறுபட்டு நிற்கவில்லை என்பதாம். பாலும் நீரும் வேறுபட்டிருப்பின் இரண்டாம். கலப்புறின் ஒன்றாம். இந்நிலையினையே புணர்ப்பென்ப. புணர்ப்பு - அத்துவிதம்.

    மனத்தைக் கட்டும் வாய்மைநெறி நற்றவமாம். சிவ வழிபாட்டின் நன்னெறியாம். இவ்வுண்மை வருமாறு :

"சித்தந் தெளிவீர்காள், அத்தன் ஆருரைப்
 பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே."
- 1. 91 - 1.
இத் திருப்பதிகச் சிறப்புச் சிறுவர்களும் ஓதத்தக்க எளிமையது.

(4)
மெய்விடா நாவுள்ள மெய்யரு ளிருந்துநீ
    மெய்யான மெய்யைஎல்லாம்
 மெய்யென வுணர்த்தியது மெய்யிதற் கையமிலை
    மெய்யேதும் அறியாவெறும்
 பொய்விடாப் பொய்யினேன் உள்ளத் திருந்துதான்
    பொய்யான பொய்யைஎல்லாம்
 பொய்யெனா வண்ணமே புகலமைத் தாயெனில்
    புன்மையேன் என்செய்குவேன்