பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

202
         "இகபரமிரண் . . . பொருளே" -

     (வி - ம்.) அவத்தை - நிலை. ஒருங்குதல் - அடங்குதல். வேலை - கடல். தட்டழிய - தடுமாற. இல்மாயை - பொய்மாயை.

     மாயையினை இல்மாயை என்பது காரணமாயை என்றும் ஒருபடித்தாய் அருவாய்த் தோற்றம் ஈறு இல்லதாய் நிற்கும். காரியமாயை பலவகையாய் உருவாய்த் தோற்றம் ஒடுக்கம் உடையதாய் நிலையில்லாததாய் இருக்கும். அதனால் அதனை இல்மாயை என்றனர். இல்மாயை என்பது பொய்யாகக் கற்பனை செய்வதன்று.

     ஆணவ வல்லிருள் தன்னையும் காட்டாது, தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் ஆவியையும் காட்டாது, புறவிருள் தன்னைக்காட்டும். ஆனால் தன்னுள் அடங்கியுள்ள உலகப்பொருள்களைக் காட்டாது.

     இவ்வுண்மை வருமாறு:

"ஒருபொருளுங் காட்டா திருளுருவங் காட்டும்
 இருபொருளுங் காட்டா திது."
- திருவருட்பயன் 23.
     எங்குமாயுள்ள இறைவன் திருவடியுணர்வு கைவந்துள்ள மூதறிஞர்க்கு முன் பின் பக்கம் முதலிய வேறுபாடுகள் உண்டாகா. நீர்நிலையில் மூழ்குவோர்க்கு மூழ்குவதன்முன், முன் பின் பக்கம் முதலிய வேறுபாட்டுரைகள் உண்டாம். மூழ்கியபின் அவ் வேறுபாடுகள் அவருக்கில்லை. இதனை வருமாறு நினைவு கூர்க:

நீர்நிலையில் மூழ்குமுன் நேருமுன்பின் பக்கமெல்லாம்
நீர்மூழ்க வுண்டாம் நிறைவு.
"புண்ணியம்மேல் நோக்குவிக்கும் பாவங்கீழ் நூக்கும்
    புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தி னாலே
 நண்ணியஞா னத்தினால் இரண்டினையும் அறுத்து
    ஞாலமொடு கீழ்மேலும் நண்ணா னாகி
 எண்ணும்இக லோகத்தே மூத்திபெறும் இவன்தான்
    எங்கெழில்என் ஞாயிறெமக்1 கென்றுகுறை வின்றிக்
 கண்ணுதல்தன் நிறைவதனிற் கலந்து காயங்
    கழிந்தக்கால் எங்குமாய் கருதரன்போல் நிற்பன்."
- சிவஞானசித்தியார், 8. 2 - 21.
(11)
 
 1. 
'உங்கையிற்.' 8. திருவெம்பாவை - 19.