(பொ - ள்) "மத்தர் . . . என்னை" - மயக்கங்கொண்டவரும், பேய் பிடிகொண்டவரும், பாலுண் குழந்தையும் (முறையே ஒருகாற்செய்து ஒருகால் ஒழிதலும், செயலிழப்பின் நின்று செய்தலும், அறவொழிதலும் ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டியவர்) ஆகிய இவர்தம் குணத்தினைப் பொருந்தி, நாலாம் வடிவம் எனப்படும் தூய (துரிய) உருவமாகி நிலைபெற்று இடங் காலம் முதலியவற்றை முற்றும் மறந்து, உன்னுடைய மெய்யடியார் தம் திருவடியின்கண் பெரும் பத்தியாய் முற்றாக நம்பியொழுகும் எளியேனை;
"ஒரு மையல் . . . இல்லை" - ஒரு வகையான நீங்காப் பெருமயக்கத் தைத்தந்து, இவ்வுலகமாகிய மாயையை (நன்றாக உற்றுற்றுப்) பார்ப்பாயாக, பார்ப்பாயாக என்று செலுத்தி நடத்த வந்தது யாது? (இத்தகைய மயக்கத்தை உண்டாக்குவதொன்று போரும் பிறவும் பெருகப் புனைந்துரைக்கும்) பாரதக் கதைகளிலும் கண்டதுண்டோ? என்றும் அழிவில்லாத கலப்பற்ற இயற்கையாகுமோ? உன் திரு ஆணையான் நிகழும் உலக மாயையின் மெய்ம்மையினை நடுநிலையாகக் கூறியருளுதல் வேண்டும்; (நன்மைபோற் புனைந்து கூறப்படும் மாயை உண்மையினைத் தெளிவிக்க வந்த) காதிகதை சொல்லுகின்ற மாயையியல்பினும் இவ்வாறு காணப்படுவதற்கில்லை;
"என்சித்த . . . பேறிதோ" - அடியேனுடைய நாட்டமாகிய சித்தம் இவ்வகையாக மயக்கங்கொண்டு உழல்வது ஒவ்வுமோ? உன்னுடைய (நீக்கமின்றி நிற்கும் வனப்பாற்றலாகிய) திருவருளைப் பொருளென நம்பி நாளும் நடப்பவர் பெறுகின்ற பேறு இதுதானோ?