பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

364
"ஆசா நிகளந் துகளா யினபின்,
 பேசா அனுபூ திபிறந் ததுவே."
- கந்தரனுபூதி - 43.
(3)
 
இன்பக் கடலில் புகுந்திடுவான்
    இரவும் பகலுந் தோற்றாமல்
அன்பிற் கரைந்து கரைந்துருகி
    அண்ணா அரசே எனக்கூவிப்
பின்புற் றழுஞ்சே யெனவிழிநீர்
    பெருக்கிப் பெருக்கிப் பித்தாகித்
துன்பக் கடல்விட் டகல்வேனோ
    சொரூபா னந்தச் சுடர்க்கொழுந்தே.
     (பொ - ள்) (ஓலியின் பயனை மிகுதியாக அடைவதற்கு வரிவடிவமும் உயிர்களை உணர உடல்வடிவமும் அமைந்திருப்பது போன்று உயிர்கள் உணர்ந்துய்ய இறைவனும் திருவருளின் காரியமாகத் திருவுருக்கொண்டருளுவன். அதுவே திருவுருவம்.) பேரின்பப் பேரொளிக் கொழுந்தே நின் திருவடிப் பேரின்பப் பெருங்கடலில் நின் திருவருளால் புகுந்து திளைத்தற்பொருட்டு இரவு என்றும் பகலென்றும் தோன்றாமல் அன்பினால் உள்ளங்கரைந்து கரைந்து உருகித் தலைமைப்பாடுடைய அண்ணலே! விழைதகு பழைமைசேர் வேந்தே! என அழைத்து அழைத்து அழுகின்ற சேயினைப் போன்று கண்ணீர் பெருக்கிப் பெருக்கிப் பித்துக் கொண்டவனாகிப் பிறவித் துன்பப் பெருங் கடலினை விட்டு விலகுவேனோ?

(4)
 
கொழுந்து திகழ்வெண் பிறைச்சடிலக்
    கோவே மன்றிற் கூத்தாடற்
கெழுந்த சுடரே இமயவரை
    என்தாய் கண்ணுக் கினியானே
தொழுந்தெய் வமும்நீ குருவும்நீ
    துணைநீ தந்தை தாயும்நீ
அழுந்தும் பவம்நீ நன்மையும்நீ
    ஆவி யாக்கை நீதானே.
     (பொ - ள்) நிலவொளி திகழ்கின்ற வெள்ளிய ஆருயிரின் அடையாளமாகிய பிறையினைச் சூடியருளிய திருச்சடையினை உடைய தெய்வவேந்தே! தில்லைத்திருச்சிற்றம்பலத்தின்கண் திருக்கூத்தியற்று தற்கென் றெழுந்த பெருஞ்சுடரே! பனிமலைக்கண் காணப்படும் உமையம்மையாராகிய (அடியேனை ஆட்கொண்டருளும்) அருட்டாயின் திருக்கண்களுக்கு இனியானே! அடியேனால் அன்புபூண்டு தொழப்படும் அருந்தெய்வமும் நீ; ஆட்கொண்டருளும் மெய்க்குரவனும் நீ; உற்றதுணையும் நீ, தந்தையும் தாயும் நீ. (நின் திருவுள்ளத்திருக்குறிப்பால்