பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

610
காதற்றுன்பம் அனைத்தும் நீ வெளிப்படையாகக் கூறுவாயானால் அவர் அதனை மெய்யெனக் கொள்வர். திறவா - வெளிப்படையாக.

(49)
 
வாட்டப் படாத மவுனஇன்பங் கையாலே
காட்டிக் கொடுத்தானைக் காண்பேனோ பைங்கிளியே.
     (பொ - ள்) உலகியல் நுகர்வுகளில் ஈடுபட்டுத் துன்புறா வண்ணம் அடியேனுக்கு அறிவடையாளக்கை எனப்படும் சின்முத்திரை காட்டியருளி அதன் வாயிலாக மௌன இன்பம் காட்டிக் கொடுத்தவனை இன்னுமொரு முறை எளியேன் காண்பேனோ?

(50)
 
வாரா வரவாக வந்தருளும் மோனருக்கென்
பேராசை எல்லாம்போய்ப் பேசிவா பைங்கிளியே.
     (பொ - ள்) அடியேனது செவ்வி நோக்கி வருதற்கரிய விருந்தாக வந்தருளிய மவுன குருவின்பால் அடியேன் கொண்டுள்ள பெருவேட்கை யினை முற்றும் நீ போய்ப் பேசி வருவாயாக. வாராவரவு - வருதற்கரிய விருந்து.

(51)
 
விண்ணவர்தம் பாலமுதம் வேப்பங்கா யாகஎன்பால்
பண்ணியதெம் அண்ணல்மயம் பார்த்தாயோ பைங்கிளியே.
     (பொ - ள்) தேவரிடத்துள்ள அமிழ்தமும் வேப்பங்காய் போன்று கைக்குமாறு எனக்குச் செய்தது எளியேன் என் தலைவர் பால் வைத்துள்ள பெருவேட்கை.1 பைங்கிளியே இதனை நீ பார்த்தாயோ?

(52)
 
விண்ணுள் வளியடங்கி வேறற்ற தென்னஅருள்
கண்ணுள் அடங்கிடவுங் காண்பேனோ பைங்கிளியே.
     (பொ - ள்) விண்ணாகிய ஆகாயத்தின் பெரு நிறைவினுள்ளே வளியாகிக் காற்று வேறற அடங்கி நிற்பது போன்று அடியேனும் திருவருட் பெருநிறைவினுள் அடங்கி நிற்குமாறு திருவருளால் காண்பேனோ? பெருநிறைவு - வியாபகம். அடங்குநிறைவு - வியாப்பியம்.

(53)
 
விண்ணார் நிலவுதவழ் மேடையிலெல் லாருமுற
மண்ணான வீட்டிலென்னை வைத்ததென்னோ பைங்கிளியே.
     (பொ - ள்) வானம் அளாவிய நிலவு தவழ்கின்ற மேல்நிலா முற்றமாகிய திங்கள்மண்டிலத்தின்கண் திருவருளால் சிவனடியார்களனைவரும் அமிழ்தவெள்ளம் நுகர்ந்துகொண்டிருக்க, அடியேன் மட்டும் இப் பூமியின்கண் இருக்குமாறு வைத்தருளியது என்ன முறையோ?

(54)
 
 1. 
'வேம்பின்'. குறுந்தொகை, 196.