பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

13

     பிறருக்குரைத்துத் தானடங்காப் பேதையரைச் செந்தமிழ்ச் சீரிய பொதுமறை கூறுவது காண்க:

"ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
 பேதையிற் பேதையார் இல்"
- திருக்குறள் 834
மனம் அடங்காதார் தனக்குவமையில்லாதான் தாள் சேராதாராவர். அவர்கள் இறப்புவருமோ என்று எண்ணித் துன்புறுவர். இவ்வுண்மை வரும் செந்தமிழ்த்திருமாமறைகளா னுணர்க:

"தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
 மனக்கவலை மாற்ற லரிது"
- திருக்குறள், 7.
"ஓம்பினேன் கூட்டைவாளா உள்ளத்தோர் கொடுமைவைத்துக்
 காம்பிலா மூழைபோலக் கருதிற்றே முகக்கமாட்டேன்
 பாம்பின்வாய்த் தேரைபோலப் பலபல நினைக்கின்றேனை
 ஓம்பிநீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூ ருடையகோவே"
4 - 46 - 1.
"மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே
 நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர்
 கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
 காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே."
- 5 - 84 - 2.
"காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
 பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்
 தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
 கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே."
- 10 - 211.
     திருவடியின்பம் அளவிடப்படாத தென்பதும் அழியாப் பேரின்பப் பெருந்தேன் என்பதும் வரும் செந்தமிழ்த்திருமாமறை முடிபுகளான் உணர்க:

"அறவே பெற்றார் நின்னன்பர் அந்த மின்றி யகநெகவும்
 புறமே கிடந்து புலைநாயேன் புலம்பு கின்றேன் உடையானே
 பெறவே வேண்டும் மெய்யன்பு பேரா ஒழியாப் பிரிவில்லா
 மறவா நினையா அளவிலா மாளா இன்ப மாகடலே."
- 8. பிரார்த்தனைப்பத்து, 6.
"தினைத்தனை யுள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே
 நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும்
 அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியும்
 குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ."
-8. திருக்கோத்தும்பி, 3.
(1)