| "நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும் |
| பெருமை யுடைத்திவ் வுலகு."1 |
| - திருக்குறள். 336. |
| "ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப் |
| பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் |
| சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு |
| நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே." |
| - 10. 189. |
பயன்பெறுமாறு உடம்பினை நெடுநாளோம்புதல் வருமாறு :
| "உடம்பார் அழியில் உயிரார் அழிவர் |
| திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் |
| உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே |
| உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே." |
| - 10. 704. |
மெய்யுணர்வுக் கல்வியின் மேம்பாடு வருமாறு :
| "வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார் |
| அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார் |
| எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்மிறை |
| கல்லா தவர்கள் கலப்பறி யாரே." |
| - 10. 298. |
| "கல்லா நெஞ்சின், நில்லான் ஈசன் |
| சொல்லா தாரோ, டல்லோ நாமே." |
| - 3. 40-3. |
ஏற்பதிகழ்ச்சியென்னும் உண்மை வருமாறு:
| "கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் |
| இரவாமை கோடி உறும்." |
| - திருக்குறள், 1061. |
வறுமை கொடிதென்பது வருமாறு காண்க :
| "இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் |
| இன்மையே இன்னா தது." |
| - திருக்குறள், 1041. |
நுண்ணறிவின்மையும் வறுமை ஆதலால் செல்வமேயன்றிக் கல்வியின்மையும் வறுமையேயாம்.
(8)