பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

23

"நானவனென் றெண்ணினர்க்கு நாடுமுளம்1 உண்டாதல்
 தானெனவொன் றின்றியே தானதுவாய்-நானெனவொன்
 றில்லென்று தானே யெனுமவரைத் தன்னடிவைத்
 தில்லென்று தானாம் இறை."
- சிவஞானபோதம். 10. 1 - 1.
திருவள்ளுவநாயனாரும் அருளுவது காண்க:

"யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
 குயர்ந்த உலகம் புகும்."
- திருக்குறள், 346.
(4)
சந்ததமும் எனதுசெயல் நினதுசெயல் யானெனுந்
    தன்மைநினை யன்றியில்லாத்
  தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த
    சமரச சுபாவமிதுவே
இந்தநிலை தெளியநான் நெக்குருகி வாடிய
    இயற்கைதிரு வுளமறியுமே
  இந்நிலையி லேசற் றிருக்கஎன் றால்மடமை
    இதசத்ரு வாகவந்து
சிந்தைகுடி கொள்ளுதே மலமாயை கன்மந்
    திரும்புமோ தொடுவழக்காய்ச்
  சென்மம்வரு மோஎனவும் யோசிக்கு தேமனது
    சிரத்தையெனும் வாளும் உதவிப்
பந்தமற மெய்ஞ்ஞான தீரமுந் தந்தெனைப்
    பாதுகாத் தருள்செய்குவாய்
  பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
    பரிபூர ணானந்தமே.
     (பொ - ள்.) 'சந்ததமு . . . சுபாவமிதுவே' - எக்காலத்தும் எளியேனுடைய செய்கை, நின்னுடைய திருவருட் செய்கையே. நான்என எண்ணுந்தன்மை உன்னை அல்லாமல் இல்லாத நிலைமையினால் நான் உனக்கு வேறுமல்லேன்; (நற்றமிழ்ப்பண்டை நான்மறை முடிபாகிய) வேதாந்தமும், (செந்தமிழ்த் திருமுறை யென்னும் சிவாகமங்களாகிய) சித்தாந்தமும் வேறுபாடின்மையாகிய ஒற்றுமையாகும்; இதுவே அவ்விரண்டின் இயல்பாகிய தன்மையாகும்;

     'இந்தநிலை . . . கொள்ளுதே' - இவ்வரிய பெரிய நிலையை (திருவருளால்) அறிந்து துணிய, அடியேன் மனம் உருகி உடைந்து, நனிமிக வாடிய மெய்த்தன்மை, நின்னுடைய அந்தண்மை நீங்காத திருவுள்ளம் அறியுமே; இத்தகைய அரிய நிலையிலேயே மனத்தினை

 
 1. 
'யான்செய்தேன்.' - சிவஞானசித்தியார் 10 - 1 - 1.