பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

258
(மெய்யுணர்வு விளங்க) மெய்ப்பொருள் அறிவுறுத்த எழுந்தருளியிருந்து அவர்களுக்கு நேர்ந்த சொல்மயக்கந் தீரும்பொருட்டு, அழகிய தந்திருக்கையின் (பெருவிரலும் சுட்டுவிரலும் வளைந்து - வணங்கி ஒன்றாய்ப். புணர்ந்து மெய்ப்புணர்ப்பு நிலைகாட்டியும் ஏனைய நடுவிரல் அணிவிரல் சுண்டுவிரல் மூன்றும் விலகி நின்று அழிவிலா மும்மல நீக்கத்தினை உணர்த்தியும் நிலைநிற்கும்) அறிவடையாளமாகிய உரையற்ற உணர்வினை உணர்த்தி;

     "சுத்த . . . வணங்குவேன்" - என்றும் அழிவில்லாத தூய திருவருளானது பிறைசூடியருளிய அந்தண்வடிவே (நற்றமிழ்நாட்டுத்) தென் திருமுகமாகக் கொலுவீற்றிருந்தருள்புரியும் காட்சியினை (க்காதலாற் கடவுட்டுணைகொண்டு) எளியேன் எத்திசையினும் வணங்குதல் புரிவேன்;

         "தெரிவ . . . விலாசமே" -

     (வி - ம்.) பன்முகம் - பலவகை: பாதகம் - பாவம்; தீமை. தர்க்கம் - வீண்வழக்கு. தன்முகம் - தன்பால்.

     சமயங்கள் பலவும் பள்ளிவகுப்புப்போன்று படிநெறியேயாம். எனினும் அவ்வந்நெறியின் நிற்பார் சிறுசிறு வேறுபாட்டுடன் பிரிந்து வெவ்வேறு நெறி வகுத்துக்கொண்டு பலர்கூடியொழுகுவதுமுண்டு. அதனால் அளவில் நெறிகள் உளவாயின. இதுபோல் சித்தர்களும், மேலுலகத்துறைவோரும் நூலும் நெறியும் நுவல்வதுமுண்டு. இவ்வுண்மை வருமாறு :

     அகப்புறச் சமயங்கள் ஆறனுள், "பாசுபதம், மாவிரதம், காபாலம், ஆகிய மூன்று நெறிகளும் செய்தார் முறையே, மாயை, வித்தை, காலமென்னும் மெய் - தத்துவங்களில் வைகும் உருத்திரர் மூலரெனக் கொள்க." (சிவஞானபோதப் பேருரை.)

     வாமம் "இந்நூல் செய்தார் சித்தபுருடர். சத்தி தத்துவத்தின் வைகும் ஓரான்மாவாற் செய்யப்பட்டது சுத்தசாத்தம் என்றறிக." (சிவஞானபோதப் பேருரை.)

     இவையொழிந்து பகைமையினால் நெறிவகுத்து அறிவார் போன்று அறியாமை காட்டி அல்லலுறுத்துவார் சொல்லும் சிவபெருமானுக்கு ஏற்றதாம் என்னும் பகைமையில்லா மேலான எண்ணம் நம் நன்னெறியார்க்குளதென்னுமுண்மை வருமாறு உணர்க :

"விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்தே
 எரிவினாற் சொன்னா ரேனு மெம்பிராற் கேற்ற தாகும்
 பரிவினாற் பெரியோ ரேத்தும் பெருவேளூர் பற்றி னானை
 மருவிநான் வாழ்த்தி யுய்யும் வகையது நினைக்கின் றேனே."
- 4. 40 - 1.
     சமயங்களின் இயல்பெல்லாம் சிவஞானசித்தியார் பரபக்கத்தின் கண்ணும், சங்கற்ப நிராகரணத்தின்கண்ணும் கண்டுகொள்க. ஈண்டுப் பெயர்களை மட்டும் குறிக்கின்றாம் :