பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

271
அலுவலாளர்களும் அமைந்து தத்தம் நிலைமைக்கேற்ற மெய்ம்மை வழுவாது ஏனையாரோடு பிணக்கமற்று இணக்கமுற்று இயல்வதூஉம் இதற்கு ஒப்பாகும்.

சமயங்கள் வருமாறு :
     புறப்புறச் சமயம்: 1. உலகாயதம், (பௌத்தத்துள்) 2. உமாத்தியமிகம், 3. யோகாசாரன், 4. சௌத்திராந்திகள், 5. வைபாடிகன், 6. ஆருகதன். மேற்கொண்டுள்ளது. புறச் சமயம்: 1. தருக்கம், 2. மீமாஞ்சை, 3. ஏகான்மவாதம், 4. சாங்கியம், 5. யோகம் 6. பாஞ்சராத்திரம் என்ப. அகப்புறச் சமயம்: 1. பாசுபதம், 2. மாவிரதம், 3. காபாலம், 4. வாமம், 5. வைரவம், 6. ஐக்கியவாத சைவம் என்பன.

     இம் மூன்றனையும் ஒருங்கு சேர்த்து முக்கூற்றுப் புறச்சமயம் என்ப. இச் சமயங்களை யெல்லாம் சித்தாந்த சைவம் படிமுறையாகக் கொண்டு தன்னகத்தடக்கிப் புறக்கணியாது ஏற்று நிற்குந் தன்மையினை வருமாறுணர்க:

     "அறுவகைச் சமயத்தோர்க்கும்" (பக்கம் 5) "விரிவிலா அறிவினார்கள்" (பக்கம் 10) "முதலொன்றாம்" (பக்கம் 10) என வருவனவற்றாற் காண்க.

"புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும்
    புகன்மிருதி வழியுழன்றும் புகலுமாச் சிரம
 அறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும்
    அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்தும்
 சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத
    சிரப்பொருளை மிகத்தெளிந்துஞ் சென்றாற் சைவத்
 திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகஞ்
    செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்."
- சிவஞானசித்தியார். 8 - 2, 1
"ஓதுசம யங்கள்பொருள் உணரும் நூல்கள்
    ஒன்றோடொன் றொவ்வாமல் உளபலவும் இவற்றுள்
 யாதுசம யம்பொருள்நூல் யாதிங் கென்னின்
    இதுவாகும் அதுவல்ல தெனும்பிணக்க தின்றி
 நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண
    நின்றதியா தொருசமயம் அதுசமயம் பொருள்நூல்
 ஆதலினால் இவையெல்லாம் அருமறையா கமத்தே
    அடங்கியிடும் அவையிரண்டும் அரனடிக்கீ ழடங்கும்."
- சிவஞானசித்தயார் 8. 2 - 3