| "நாமல்ல இந்திரியம் நம்வழியின் அல்லவழி |
| நாமல்ல நாமும் அரனுடைமை - ஆமென்னில் |
| எத்தனுவில் நின்றும் இறைபணியார்க் கில்லைவினை |
| முற்செய்வினை யுந்தருவான் முன்." |
| - சிவஞானபோதம், 10. 1 - 1. |
"ஆத்துவா" என்பது வழி. அவை ஆறுவகைப்படும்: அவை சொல்வழி மூன்றும், பொருள்வழி மூன்றும் எனப் புகல்ப. சொல்வழி: 1. எழுத்துவழி, 2. சொல்வழி. 3. மறைமொழிவழி. இவற்றை முறையே வர்ணம், பதம், மந்திரம் எனவுங் கூறுப. பொருள்வழி: 1. உலகவழி, 1. மெய்வழி, 3. கலைவழி. இவற்றை முறையே புவனம், தத்துவம், கலை எனவுங் கூறுப. வினைகள் உள்ளம் உரை உடல் மூன்றெனப்படும், மனமொழி மெய்களான் நிகழ்வன. உள்ளத்தால் நிகழ்வன கலைவழியென்றும். உரையால் நிகழ்வன சொல்வழி யென்றும், உடலான் நிகழ்வன பொருள்வழி யென்றும் ஒருபுடை யொப்பாகக் கூறலாம்.
"பளிங்கனைய சித்து" பளிங்கினுக்குச் சார்ந்ததன்வண்ணமாய் நிற்றன்மாத்திரையேயன்றி அதனைப் பற்றுந்தன்மையாகிய சிறந்த குணமும் உண்டு; அதுபோல் ஆவிக்குச் சார்ந்ததன் வண்ணமாய் நிற்றன் மாத்திரையேயன்றி அதனை அழுந்தியறியும் தன்மையாகிய சிறப்புக் குணமும் உண்டு. அழுந்தியறிதலே ஆன்மாவின் இயல்பு. அதுவே அனுபவம். இவ்வுண்மையினை வருமாறு நினைவுகூர்க :
| பற்றும் அதுவதுவாய் நிற்கும் பயன் துய்க்கும் |
| உற்றுவே றோரா துயிர். |
ஆருயிர்கட்குப் பிறப்பின்கட் காணப்படும் இயல்பு நீங்கு நிலையாகிய பொது இயல்பு. சிறப்பாகிய செம்பொருளாம் சிவன் திருவடிச்சார்பின்கண் நிகழும் நிகழ்வு நீங்கா நிலையாகிய உண்மை நிலையாகும். ஆருயிர்கள் ஒன்றையறியுங்கால் பிறிதொன்றனையறியா
(18)
அறிவாகி ஆனந்த மயமா யென்றும் | அழியாத நிலையாகி யாதின் பாலும் | பிறியாமல் தண்ணருளே கோயி லான | பெரியபரம் பதியதனைப் பேறவே வேண்டில் | நெறியாகக் கூறுவன்கேள் எந்த நாளும் | நிர்க்குணநிற்(கு) உளம்வாய்த்து நீடு வாழ்க | செறிவான அறியாமை எல்லாம் நீங்க | சிற்சுகம்பெற் றிடுகபந்தந் தீர்க வென்றே. |
"அறிவாகி . . . வேண்டின்" - தானே விளங்கும் தனிப்பேரறிவுருவாய், இறவாத இன்பமயமாய், என்றும் ஒன்றுபோல் தோற்ற வொடுக்கமாகிய அழிவில்லாத நிலையதாகி, உயிர்ப்பொருள் உயிரில்