பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

402
தன்மயஞ் சுபாவம் சுத்தந் தன்னருள் வடிவஞ் சாந்தம்
மின்மய மான அண்ட வெளியுரு வான பூர்த்தி
என்மயம் எனக்குக் காட்டா தெனையப கரிக்க வந்த
சின்மயம் அகண்டா காரந் தட்சிணா திக்க மூர்த்தம்.
    (பொ - ள்.) சிவபெருமான் தென்முகச் செல்வராய்த் திருக்கோலம் கொண்டருளிய இயல்பாவது, எல்லாவற்றுடனும் நீக்கமின்றி நிற்கும் இயல்பும், தான் தூயமையாய் இயல்பாக, விருந்து தன்பால் சார்ந்த அனைத்தையும் தூய்மைப்படுத்துத் திகழ்வதால் தூய்மையும், மிகக் குளிர்ந்த அருளுடைமையும், பேரமைதியும் மின்னொளி போன்று விளங்கும் அண்டத்தை அகப்படுத்தி நிற்கும் திருவருள்வடிவான பெரு நிறைவும் அடியேனுடைய சிற்றியல்பினை எளியேனுக்குக் காட்டாது அடியேனைத் தன்னுள் ஒடுக்குதலாகிய விழுங்கியருளுதற்கு வந்தருளிய வாலறிவே உருவாய், எல்லையில்லாப் பெருவடிவே நிலையமாய் நிற்கும் இயல்பென்க.

(33)
சிற்ற ரும்பன சிற்றறி வாளனே தெளிந்தால்
மற்ற ரும்பென மலரெனப் பேரறி வாகிக்
கற்ற ரும்பிய கேள்வியால் மதித்திடக் கதிச்சீர்
முற்ற ரும்பிய மௌனியாய்ப் பரத்திடை முளைப்பான்.
    (பொ - ள்.) சிற்றரும்பு போன்ற விளக்கமுறாத ஒருவனுடைய நிலை கண்டு சிறிய அறிவை ஆளுந்தன்மையனே! தன்னுடைய இந்நிலையினைத் தான் தெளியப்பெற்றால் அவ்வரும்பு பேரரும்பு எனப்படும் போதாகிப் பின் மணங்கமழ மலர்ந்து பேரறிவாகி ஆசானை அடுத்துக் கற்று விளங்கிய பேரறிவாளனாய்ப் பலரு மதித்திட மோனநிலையுடன் விளங்குவன். திருவடிப் பேறாகிய பேரின்பப் பெருநிலையின்கண் சென்றணைந்து என்றும் ஒன்றுபோ லின்புற்றிருப்பன்.
(34)
மயக்கு சிந்தனை தெளிவென இருநெறி வகுப்பான்
நயக்கு மொன்றன்பால் ஒன்றிலை யெனல்நல வழக்கே
இயக்க முறறிடும் மயக்கத்தில் தெளிவுறல் இனிதாம்
பயக்க வல்லதோர் தெளிவுடை யவர்க்கெய்தல் பண்போ.
    (பொ - ள்.) சார்ந்ததன் இயல்பாம் மனம் மயக்கத்தினைச் சார்ந்து அறிவு மயக்கமாய், தெளிவினைச் சார்ந்து அறிவு தெளிவாய் நிற்குமென இரண்டு பகுப்புள்ளது. ஒன்றிற் சார்ந்த மனத்துக்கு மற்றொன்றில்லையாகும். இது யாண்டும் நிகழும் முறைமையாகிய வழக்கேயாம். தெளிந்தவருள்ளமும் மயக்கத்தில் ஈடுபடுதல் இனிமையாகுமா? பயன்படுதற்கு வல்லமையுடைய தெளிவினர்க்கு மயக்கம் எய்துதல் பண்பாகுமா? (ஆகாதென்பதாம்.)
(35)