பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

588
     (பொ - ள்) அடியேன் அறிவினைப் போன்று நின்திருவருளால் எளியேன் மனமும் செயலற்று அடங்கிவிடுமேயானால், பின்பு ஏழையேனைக் கொண்டு செய்விக்கும் செயலனைத்தும் நின் திருவருட் செயலாகக் கண்டு1 வாழ்வேன்.

(325)
 
பந்தமெலாந் தீரப் பரஞ்சோதி நீகுருவாய்
வந்த வடிவை மறவேன் பராபரமே.
     (பொ - ள்) சிவபெருஞ்சுடரே! அடியேனுடைய பிறவிப் பிணிப்பு முற்றும் அற்றுநீங்கத் தேவரீர் சிவகுருவின் வடிவாய் எழுந்தருளி வந்து ஆட்கொண்டருளினை; அவ்வருட்குருவடிவினை அடியேன் எந்நாளிலும் மறக்கமாட்டேன்.

(326)
 
தானந்த மான சகச நிருவிகற்ப
ஆனந்த நிட்டைஅருள் ஐயா பராபரமே.
     (பொ - ள்) தனக்குமேல் ஒன்றுமில்லாத தன்னளவிலேயே முடிவுற்ற இயல்பான பேறுபாடில்லாத பேரின்பப் பெருநிட்டை நிலையினை அருள்புரிய வேண்டும் முதல்வனே.

(327)
 
அல்லலெல்லாந் தீரஎனக் கானந்த மாகவொரு
சொல்லைஎன்பால் வைத்ததையென் சொல்வேன் பராபரமே.
     (பொ - ள்) உலகியற் றுன்பம் முற்றும் அடியேனுக்கு அற்று ஒழியும்படி பேரின்பப்பெரு நிலையாகச் செம்பொருட்டுணிவின் பெருமொழியை எளியேன்பால் வைத்தருளிய நின் நிலையினை எவ்வாறு எடுத்தேத்திப் புகழ்வேன்?

(328)
 
சிந்தை மயக்கமறச் சின்மயமாய் நின்றவுன்னைத்
தந்தவுனக் கென்னையும்நான் தந்தேன் பராபரமே.
     (பொ - ள்) அடியேனுடைய மனமயக்கந் தீரும்படி மீநுண்ணறிவு வடிவாய் எளியேன் உள்ளத்தின்கண் மிக்கோங்கி எழுந்தருளி நின்று நின்திருவடியினைத் தந்தருளிய உனக்கு நோன்மைப் பருமை யறிவாம் எளியேனைத் தந்துநின் திருவடிக்கண் ஒப்புவித்தேன். மீநுண்ணறிவு - அதிசூக்கும2 சித்து. நோன்மை பருமையறிவு - தூல சித்து.

(329)
 
மைகாட்டு மாயை மயக்கமற நீகுருவாய்க்
கைகாட்ட வுங்கனவு கண்டேன் பராபரமே.
     (பொ - ள்) ஆணவச்சார்பாம் மாயை மயக்கத்தைச் செய்யும் தன்மைத்து. அம் மயக்கம் அற்றொழியுமாறு தேவரீர் சிவகுருவாய் எழுந்தருளி வந்து அறிவுப் பொறித்திருக்கையினை அடியேன் கனவின்கண் காட்டியருளியமை கண்டேன்.

 
 1. 
'அன்றே என்றன்' - 8. குழைத்தபத்து - 7.
 2. 
'அசித்தரு', சிவஞானசித்தியார், 4 - 2 - 15.
 " 
'தந்ததுன்', 8. கோயிற்றிருப்பதிகம், 10.