பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

599
     (பொ - ள்) திருவருளால் சொல்லும் நினைவும் ஒரு தன்மைப் பட : அடியேன் பேசுவதல்லாமல் மாறுபட்ட தன்மையாக ஒரு போதும் பேசேன்.

(380)
 
வன்மையின்றி எல்லாம் மதித்துணர்வாய்க் காகெடுவேன்
தன்மையொன்றுந் தோயாத் தடையோ பராபரமே.
     (பொ - ள்) திருவுள்ளத் தண்ணளியோடு கடிய மனமின்றி, எல்லாவற்றையும் மதித்துணரும் தேவரீருக்கு ஐயோ! கெடுவேன் அடியேன்பால் திருவுள்ளந் தோயாமலிருப்பதற்குத் தடை யாதோ? (செவ்வியாகிய பரிபக்குவம் வாய்க்கப் பெறாமையேயாம்.) உணர்வாய்க்கு ஆகெடுவேன்.

(381)
 
பத்தர்சித்தர் வாழிபரி பக்குவர்கள் வாழிசெங்கோல்
வைத்தவர்கள் வாழிகுரு வாழி பராபரமே.
     (பொ - ள்) திருவடியின்கண் நீங்காப் பெரும்பத்தியினையுடைய சிவபத்தர்கள் திருவருளால் என்றென்றும் வாழ்க! திருவடிப் பேறு பெற்ற சிறந்த செம்பொருட் செல்வர்கள் வாழ்க. ஆரா அன்பின் வழி நின்று திருத்தொண்டினைச் சீர்பெறச் செய்துவரும் பரிபக்குவர்களாகிய செவ்வியோர் வாழ்க. திருவருள் வழிநின்று செங்கோன் முறைமை தவறாது உலகாளும் ஆட்சி இறைவர்கள் வாழ்க. அனைவர்க்கும் நன்னெறி காட்டி உய்யக் கொள்ளும் சிவகுருவின் திருவடி வாழ்க.

(382)
 
கல்லாதேன் ஆனாலுங் கற்றுணர்ந்த மெய்யடியார்
சொல்லாலே நின்னைத் தொடர்ந்தேன் பராபரமே.
     (பொ - ள்) மெய்கண்ட நூல்களைக் கற்கும் நற்பேறு பெற்றிலேன் ஆயினும் திருவருளால் (கற்றுவல்ல பெரியோர் கூறியருளும் உறுதி மொழிகளைக் கேட்பது1 போன்று) மெய்யடியார்கள் உணர்த்தியருளும் அருமறைகளைக் கேட்டுய்யும் வாய்ப்புப் பெற்றுள்ளேன். அதனால் அம் மறைவழி நின்று ஒழுகி நின் திருவடியினைத் தொடர்ந்துள்ளேன்.

(383)
 
சொல்லிறப்பச் சற்குருவாய்த் தோன்றிச் சுகங்கொடுத்த
நல்லவர்க்கே கொத்தடிமை நான்காண் பராபரமே.
     (பொ - ள்) சொல்லடக்க2 மாகிய மவுன நிலையினை எளியேன் நேரிற் கண்டு கைக்கொண்டுய்யும் பொருட்டு மவுன குருவாய் எழுந்தருளி வந்து திருவடியின் நலங்கொடுத்தருளிய நல்லுரைக்கு அடியேன் எந்நாளிலும் கொத்தடிமையாக வுள்ளேன்.

(384)
 
முத்திக்கு வித்தான மோனக் கரும்புவழி
தித்தித் திடவிளைந்த தேனே பராபரமே.
 
 1. 
'கற்றில' திருக்குறள், 414.
 2. 
'யாகாவா.' " 127.