பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

602
     (வி - ம்.) அழுக்கு - மலம். அழுக்கேறிய ஆடை - மலச்சார்பாகிய உடல். தூயவானம் - சுத்தமாயையின் வெளி. அதுவே சிவபெருமானின் தூய ஆடை. அதைத்தருதல் உடலைத் திருவருட் சார்பாக்குதல். இனி ஆடை என்பதைக் கலையெனக் கொண்டு கட்டிலான் சிவன் என்பதூஉமாம். கலை - கட்டு, தன்னைப்போல் அடியேனையும் மலப்பிணிப்பினின்று விடுவிப்பானோ எனவுமாம்.

(6)
 
உன்னாமல் ஒன்றிரண்டென் றோராமல் வீட்டுநெறி
சொன்னான் வரவும்வகை சொல்லாய்நீ பைங்கிளியே.
     (பொ - ள்) அடியேனுக்கு வேறாகச் சிவன் உள்ளதென்றோ சிவனுக்கு வேறாக அடியேனுக்குத் தனிநிலை யுண்டென்றோ, சிவனுக்கு வேறாக ஒரு பொருளுமில்லை; எல்லாம் சிவனென்றோ மாறுபட நினையாமல், ஆராய்தலும் செய்யாமல் ஆண்டான் அடிமைத்திறம் அறிவுறுத்தும் மெய்கண்ட நன்னெறியினை அடியேனுக்கு அருளிச் செய்த மவுன குரவன் இன்னம் ஒருமுறை எழுந்தருளிவரும் வகையினைச் சொல்வாயாக.

(7)
 
ஊருமிலார் பேருமிலார் உற்றார்பெற் றாருடனே
யாருமிலார் என்னை அறிவாரோ பைங்கிளியே.
     (பொ - ள்) (பிறப்பின்மையால்) தனக்கென ஓர் ஊருமில்லாதவர். பெயருமில்லாதவர். உற்றார் தாய்தந்தை முதலிய யாரும் இல்லாதவர். அடியேனை அறிந்து கொள்வரோ?

(8)
 
ஊரைப்பா ராமல்எனக் குள்ளகத்து நாயகனார்
சீரைப்பார்த் தாற்கருணை செய்வாரோ பைங்கிளியே.
     (பொ - ள்) வெளிமுகமாகக் காணப்படும் ஓர் ஊரினை நோக்காமல் அடியேன் உள்ளகத்து வீற்றிருக்கும் நாயகனார்தம் திருவடிச் சீரினை உண்முகமாகப் பார்த்தால் திருவருள் செய்வரோ? (செய்தருள்வரென்பதாம்.)

(9)
 
என்று விடியும் இறைவாவோ என்றென்று
நின்றநிலை எல்லாம் நிகழ்த்தாய்நீ பைங்கிளியே.
     (பொ - ள்) (அடியேனைச் சூழ்ந்திருக்கும் ஆணவவல்லிருள், நின் திருவருள் ஒளியினால் நீங்கப்பெற்று விடியும் நிலை எய்துவது எந்நாளிலோ? அடியேன் ஆருயிர்க்குரிய தலைவரே! அடுத்தடுத்து அடியேன் கூறி அல்லலுறும் நிலைமையனைத்தினையும் எடுத்து எளியேனின் தலைவர்க்கு மொழிவாயாக.

(10)
 
எந்தமட லூடும் எழுதா இறைவடிவைச்
சிந்தைமட லாலெழுதிச் சேர்ப்பேனோ பைங்கிளியே.
     (பொ - ள்) (உருவம், அருவுருவம், அருவம் என்று சொல்லப்படும் வடிவநிலைகள் மூன்றுங் கடந்த விழுமிய முழுமுதல்வனாகிய) எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவனும் பேரொடுக்கப் பெருந்தொழிலைச்