பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

613
பச்சைநிற மாய்ச்சிவந்த பாகங் கலந்துவகை
இச்சையுடன் ஈன்றாளை யாங்காண்ப தெந்நாளோ.
     (பொ - ள்) பச்சைநிறத் திருமேனி யுடையவளாய்ச் செம்மை நிறம் பொருந்திய சிவபெருமானின் இடப்பாகத்தை இடமாகக் கொண்டருளியவளாய் உலகனைத்தையும் தன் தண்ணளியால் பெறாது பெற்றெடுத்த உமையம்மையாரை அடியேன் அவர் திருவருளால் காண்பது எந்நாளோ?

(7)
 
ஆதியந்தங் காட்டா தகண்டிதமாய் நின்றுணர்த்தும்
போதவடி வாம்அடியைப் போற்றுநாள் எந்நாளோ.
     (பொ - ள்) தோற்றமும் இறுதியும் இல்லாத எங்கணும் முழு நிறைவாய் எவ்வுயிர்க்கும் உயிர்க்குயிராய் நின்றுணர்த்தும் பேரறிவே தன் வடிவாகக் காணப்படும் திருவருளின் திருவடியினைப் பூத்தூவிப் போற்றிமறை புகன்று போற்றி வழிபடுநாள் எந்நாளோ?

(8)
 
கங்கை நிலவுசடைக் காட்டானைத் தந்தையெனும்
புங்கவெண்கோட் டானைபதம் புந்திவைப்ப தெந்நாளோ.
     (பொ - ள்) வான்புனல் தங்கும் திருச்சடைக் காட்டினையுடைய சிவபெருமானைத் தந்தையாகக் கொண்டுள்ள உயர்ந்த வெள்ளிய ஒற்றைக் கொம்பினையுடைய மூத்தபிள்ளையாரை அடியேன் உள்ளத்தினுள்ளே வைத்து வழிபடுவ தெந்நாளோ?

(9)
 
அஞ்சமுகங் காட்டாமல் ஆறுமுகங் காட்டவந்த
செஞ்சரணச் சேவடியைச் சிந்தைவைப்ப தெந்நாளோ.
     (பொ - ள்) நடுங்கும்படியான சினக் குறியுடன்கூடிய திருமுகத்தைக் காட்டியருளாமல் அனைவர்க்கும் ஆறுதலுண்டாகும்படியான ஆறுதிருமுகங்களைக் காட்டியருள வந்த திருமுகப்பெருமானின் செவ்விய அடைக்கல நிலைக்களமாகிய திருவடிகளை அடியேன் உள்ளன்புடன் நாடுநாள் எந்நாளோ?

(10)
 
தந்தைஇரு தாள்துணித்துத் தம்பிரான் தாள்சேர்ந்த
எந்தைஇரு தாளிணைக்கே இன்புறுவ தெந்நாளோ.
     (பொ - ள்) சிவபூசையினைச் செய்யவொட்டாது பாற்குடத்தைக் காலாற் கவிழ்த்துப் பாவஞ்செய்த தம் தந்தையின் இருகாள்களையும் துணித்து வீழ்த்துச் சிவபெருமான் திருவடிகளை அணைந்த சண்டேசுர நாயனார்1 இரண்டு திருவடிக்கே காதல்கொண்டு இன்புறுவ தெந்நாளோ?

(11)
 
 1. 
'தழைத்ததோ'. 4. 49 - 3.
 "  
'கருதுங்கடிசேர்ந்த'. 12. சம்பந்தர் - 836.