பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


66


தென்னும் இயல்பு இல்லதாய் மாறாது திகழ்ந்துகொண்டிருக்கும் (பெரும் பெயர்க்கிளவயாகிய) பெரும் பொருளே! (பண்டைச் செந்தமிழ்மறைகளே) தெய்வ மறையின் திருமுடியாகிய ஓங்காரத்தின் உட்பொருளே! முடிந்த முடிவெனப்படும் செம்பொருட்டுணிவின் விழுமிய முழுமுதலே!

        "சிரகிரி.....குருவே"

     (வி - ம்) சரம் - நிலைத்திணைப் பொருள்; அசையாதது. சரம் - இயங்குதிணைப் பொருள்; அசையும் பொருள். சமயம் - நெறி. சமரசம் - பொதுமை. பரிபூரணம் - முழுநிறைவு. அகண்டிதம் - வரையறுக்கப்படாதது; எல்லையற்றது. சித்தாந்தம் - முடிந்தமுடிபு. முத்தி - பேறு.

     உலகம் வினைமுதற்காரணம் எனப்படும் நிமித்தகாரணனால் ஆருயிர்கள் மலச்சிறையினின்றும் விடுபட்டுத் திருவடி நலச்சிறப்பினை எய்துதற்பொருட்டுப் படைக்கப்பட்டது. இவ்வுலகிற்று முதற்காரணம் மாயை. துணைக்காரணம் திருவருளாற்றல், இவ்வுண்மை வருமாறுணர்க :

"காரிய காரணங்கள் முதல்துணை நிமித்தம் கண்டாம்
 பாரின்மண் திரிகை பண்ணு மவன்முதல் துணைநிமித்தம்
 தேரின்மண் மாயை யாகத் திரிகைதன் சத்தியாக
 ஆரியன் குலால னாய்நின்று ஆக்குவன் அகில மெல்லாம்."
ஆரியன் - சிவபெருமான்.-சிவஞானசித்தியார் 1. 1 - 18.
     பொன்னார் மேனியனாகிய சிவபெருமான் பொய்யர் நெஞ்சிற் புகாமையும், மெய்யர் நெஞ்சில் மிக்கோங்கிப் புகுதலுமாகிய ஈரியல்புடையன். இவ்வுண்மை வருமாறுணர்க :

"மெய்யானைத் தன்பக்கல் விரும்பு வார்க்கு
    விரும்பாத அரும்பாவி யவர்கட் கென்றும்
 பொய்யானைப் புறங்காட்டில் ஆட லானைப்
    பொன்பொதிந்த சடையானைப் பொடிகொள்பூதிப்
 பையானைப் பையரவ மசைத்தான் தன்னைப்
    பரந்தானைப் பவளமால் வரைபோன் மேனிச்
 செய்யானைத் திருநாகேச் சரத்து ளானைச்
    சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே."
- 6. 66. - 5.
     மறைகளின் தெய்வத்தன்மையும் அதன் முடிவாகிய ஓங்காரத்தின் பெருமையும் விழுமிய முழுமுதலாகிய நும்மால் ஏற்படுவனவேயாம். வேதத்திலும் ஆகமத்திலும் தெளியக்காண்டலை விடச் செந்தமிழ் மெய்ந்நூல்களில் அரியபெரிய உண்மைப்பொருள்களை எண்மையில்