பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

663
பஞ்சாய்ப் பறக்குநெஞ்சப் பாவியைநீ கூவிஐயா
அஞ்சாதே என்றின் னருள்செயவுங் காண்பேனோ.
     (பொ - ள்) பஞ்சினைப் போல் உலகில் சுற்றித் திரியும் பாவியாகிய எளியேனை முதல்வனே நீ கூவி அழைத்து ஐயா, அஞ்சாதே என்று நின் இனிய திருவருளைப் புரியவுங் காணப்பெறுவேனோ?

(21)
 
ஆடுகறங் காகி அலமந் துழன்றுமனம்
வாடுமெனை ஐயாநீ வாவெனவுங் காண்பேனோ.
     (பொ - ள்) வானத்தில் ஆடுங் காற்றாடியை ஒத்துச் சுழன்று உழன்றுகொண்டிருக்கும் தன்மையால் மனம்வாட்டம் எய்தி வருந்தும் எளியேனை, ஐயா நீ வாவென அழைத்தருளவுங் காணப்பெறுவேனோ?

(22)
 
சிட்டர்க் கெளிய சிவனேயோ தீவினையேன்
மட்டற்ற ஆசை மயக்கறவுங் காண்பேனோ.
     (பொ - ள்) மெய்யடியார் எனப்படும் சிட்டர்களுக்கு மிக எளியராகக் காணப்படும் சிவபெருமானே! தீவினையினை யுடைய யான் கொண்டுள்ள அளவில்லாத ஆசை மயக்கம் அற்றொழியும்படி நின்திருவருளால் காணப்பெறுவேனோ?

(23)
 
உள்நின் றுணர்த்தும் உலப்பிலா ஒன்றேநின்
தண்ணென்ற சாந்தஅருள் சார்ந்திடவுங் காண்பேனோ.
     (பொ - ள்) உணர்விற்கு உணர்வாய் உண்ணின்று ஓவாது உணர்த்தியருளுகின்ற அழிதலில்லாத ஒப்பில்லாத தனிப் பெருமுதலே நின்னுடைய மிகக் குளிர்ந்த அமைதி வாய்ந்த நின்திருவருளை அடியேன் சார்ந்திடவுங் காணப்பெறுவேனோ?

(24)
 
ஓடுங் கருத்தொடுங்க உள்ளுணர்வு தோன்றநினைக்
கூடும் படிக்கிறைநீ கூட்டிடவுங் காண்பேனோ.
     (பொ - ள்) உலகியல் வழியாகச் செல்லுங் கருத்து ஒடுங்கவும், உள்ளுணர்வு விளங்கவும், நின்திருவடியினைக் கூடும்படிக்கும் முதல்வனே நீ அடியேனுக்குக் கூட்டிடவும் காணப்பெறுவேனோ?

(25)
 
வாக்கால் மனத்தால் மதிப்பரியாய் நின்னருளை
நோக்காமல் நோக்கிநிற்கும் நுண்ணறிவு காண்பேனோ.
     (பொ - ள்) சொல்லினாலும், நினைப்பினாலும் அளவிட்டுக் கூறமுடியாத இறைவனே நின்திருவருளினை அடியேன் முனைப்பறிவு முன்னிட்டுக் காணாமல் திருவருளுணர்வு கண்ணாகக் காண்கின்ற நுண்ணிய அறிவும் எளியேனுக்குண்டாகக் காண்பேனோ? நோக்காமல் நோக்கல் - கண்ணால் பாராது கருத்தால் பார்த்தல்.

(26)