பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


77


     முதல்வன் எல்லாமாய் அல்லதுமாய் நிற்கும் நிலையினைவருமாறுணர்க:

"வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
 ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
 கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
 வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே."
-8. திருச்சதகம். அறி. 5.
     'வரவினொடு போக்கற்று' என்பது பிறப்பு இறப்பு இன்மையைக் குறிக்கும். இவ்வுண்மை வருமாறுணர்க:

"பிறவாதும் இறவாதும் பெருகி னானைப்
    பேய்பாட நடமாடும் பித்தன் தன்னை
 மறவாத மனத்தகத்து மன்னி னானை
    மலையானைக் கடலானை மனத்து ளானை
 உறவானைப் பகையானை உயிரா னானை
    உள்ளானைப் புறத்தானை ஓசை யானை
 நறவாரும் பூங்கொன்றை சூடி னானை
    நாரையூர் நன்னகரிற் கண்டே னானே."
-6 - 74 - 6.
    'குறி' யொன்றும் இல்லாமையை வருமாறுணர்க:

"திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
 உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
 ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க் காயிரந்
 திருநாமம் பாடிநாந் தெள்ளேணங் கொட்டாமோ."
- 8. திருத்தெள்ளேணம், 1.
    'விந்து நாதமற்' றென்பது தூமாயையுங் கடந்துநின்று அம் மாயையையும் ஆட்டும் வாய்மை மெய்ப்பொருள் என்பதாம்.

    'ஒன்றற்று இரண்டற்று' என்பதன் உண்மையினை வருமாறுணர்க:

"ஒன்றன் றிரண்டன் றுளதன் றிலதன்று
 நன்றன்று தீதன்று நானென்று-நின்ற
 நிலையன்று நீயன்று நின்னறிவு மன்று,
 தலையன் றடியன்று தான்."
- திருக்களிற்றுப்படியார், 58.
     (சொல்லிறந்த தொன்மைப் புணர்ப்பு.)