பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

170
(உண்மை உணர்வார் எவர்க்கும் அவர்தம் உடல் பெருஞ்சுமையே அதுபோல்) அடியேன் உடலும் எளியேனுக்குப் பெருஞ்சுமையே, அஃதங்ஙனமிருப்ப, அவ்வுடல் நீங்கியொழிவது குறிப்பிடப்பட்ட இந்நேரமென்றோரு வரையறையில்லை; (ஆனால்) எடுத்தவுடல் இறக்கும் என்னும் யாப்புறவு எங்கெங்கும் கடமையுடன் உண்டு.

     "ஆயினும் . . . நம்புகின்றேன்" - அப்படியாயினும், பழைமையான பண்பாடு நிறைந்த சுகர் முதலிய பெருமுனிவர்கள் (போற்றிசைத்துப் பூத்தூவித் தொழுது) வணங்க அவர்கள் தங்கள் தங்கள் உடம்புடனே நெடுநாள் இருந்து தொண்டியற்றும்படி வகுத்தருளிய நின்திருவருள் அடியேனுக்கும் துணைநின்றருளும் என்று நம்புகின்றேன்.

         "சுத்தநிர்க் . . . .சுகவாரியே" -

     (வி - ம்.) வெடுக்கென்று - கடுமையாக, விழி - கண். இமைத்து - கண்ணிமைமூடி. ஐயோ - அந்தோ. ஐய - முதல்வ. தீர்வை - யாப்புறவு; நியமம்; முடிவு. ஆயம் - கடமை. தொன்மை - பழைமை. நீர்மை - பண்பு. மானிடம் - உடம்பு.

உடம்பு சுமையென்னும் உண்மையினை வருமாறுணர்க :

"மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
 உற்றார்க் குடம்பும் மிகை."
- திருக்குறள், 3-45.
"புழுநெளிந்து புண்ணழுகி யோசனை நாறும்
 கழிமுடை நாற்றத்த வேனும் - விழலர்
 விளிவுன்னி வெய்துயிர்ப்பர் மெய்ப்பயன் கொண்டார்
 சுளியார் சுமைபோடு தற்கு."
- நீதிநெறிவிளக்கம் - 43
    பொறுக்கலாற்றாத் துன்பம் நேர்ந்து வருந்தினும் மெய்யடியார்கள் தண்ணருளையே நாடுவர் என்னும் மெய்ம்மை வருமாறு :

"அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன்
    அதுவு நான்படப் பாலதொன் றானால்
 பிழுக்கை வாரியும் பால் கொள்வ ரடிகேள்
    பிழைப்ப னாகிலும் திருவடிப் பிழையேன்
 வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லான்
    மற்று நானறி யேன்மறு மாற்றம்
 ஒழுக்க வென்கணுக் கொருமருந் துரையாய்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே."
- 7. 54 - 1
(5)