பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

403
அருள்வடி வேழு மூர்த்தம்
    அவைகள்சோ பான மென்றே
சுருதிசொல் லியவாற் றாலே
    தொழுந்தெய்வம் எல்லாம் ஒன்றே
மருளெனக் கில்லை முன்பின்
    வருநெறிக் கிவ்வ ழக்குத்
தெருளினமுன் னிலையாம் உன்னைச்
    சேர்ந்தியான் தெளிகின் றேனே.
    (பொ - ள்.) ஆருயிர்கள் உய்தற்பொருட்டு முதல்வன் திரு வருள்வடிவாகத் திகழ்ந்தருள்வன்; அத்தகைய திருக்கோலங்கள் ஏழென்ப. அவ்வேழும் பள்ளி வகுப்புப்போல் ஒன்றனுக்கொன் றுயர்வாய்ச் செந்தமிழ்த் திருமாமறை வழியாக வழிபடற்கமைந்துள்ளன. அவ்வேழின் கண்ணும் செய்யப்படும் வழிபாடு படிமுறை வழிபாடென மறைகள் முழங்குகின்றன. அதனால் தொழப்படுந் தெய்வம் சொல்லுமிடத்து ஒன்றேயாம். உடலின் உறுப்புப் போன்று அவ்வொன்றன் திருக்கோலமே பலவார் இவ்வுண்மை தெளிதலால் அடியேனுக்கு முனும் பின்னும் வருவதாகிய வழிக்கு மயக்கமில்லை. தெளிவின் முன்னிலையாகக் காணப்படும் உன்னைச்சார்ந்து அடியேனுந் தெளிவெய்தி நிற்கின்றேன்.

     (வி - ம்.) ஆசான் ஆண்டான் அருளோன், எழுத்து ஓசை, அன்னை அத்தன் எனத் தூமாபை மெய்க்கண் காணப்படும் துணைவன் எழுந்தருளத், தாமம் தனியிருக்கைச் சார்பு ஏழாகும். இவ்வேழும் முறையே சுத்த வித்தை, ஈசுரன், சதாசிவம், விந்து, நாதம், சத்தி, சிவன் எனவுங் கூறுப. முதல்வன் யாண்டும் ஒருவனே என்னும் உண்மை வருமாறு :

"இவரே முதற்றேவ ரெல்லார்க்கு மிக்கார்
 இவரல்ல ரென்றிருக்க வேண்டாங்-கவராதே
 காதலித்தின் றேத்துதிரேற் காளத்தி யாள்வார்நீர்
 ஆதரித்த தெய்வமே யாம்."
- 11. 51 - காளத்தி - 72
(36)
எத்தனைப் பிறப்போ எத்தனை இறப்போ
    எளியேனேற் கிதுவரை யமைத்து
அத்தனை யெல்லாம் அறிந்தநீ யறிவை
    அறிவிலி அறிகிலேன் அந்தோ
சித்தமும் வாக்குந் தேகமும் நினவே
    சென்மமும் இனியெனால் ஆற்றா
வைத்திடிங் கென்னை நின்னடிக் குடியா
    மறைமுடி யிருந்தவான் பொருளே.