பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

428
நிலையினைப் பெறாது எளியேன் அறிவு பொல்லாத பிறப்பினை விளைக்கவல்ல பொறி புலன்களிற் செல்லுதற்கோ தாவிச்செல்லும் மான்போன்று துள்ளிப்பாய்கின்றது.

(10)
ஆறொத் திலங்கு சமயங்கள் ஆறுக்கும் ஆழ்கடலாய்
வீறிப் பரந்த பரமான ஆனந்த வெள்ளமொன்று
தேறித் தெளிந்து நிலைபெற்ற மாதவர் சித்தத்திலே
ஊறிப் பரந்தண்ட கோடியெல் லாம்நின் றுலாவியதே.
    (பொ - ள்.) பெருங்கடலிற் போய்க்கூடும் ஆறுகளையொத்து அகச்சமயங்கள் ஆறும் காணப்படும்; அத்தகைய சமயத்தார் வந்து பேறடைதற்குரிய பேரருட் பெருங்கடலாய்ப் பிறிதொன்றிற்கில்லாத பெருமையையுடைய மேலான பேரின்பப் பெருவெள்ளமொன்று, திருவருளால் மெய்ம்மையுணர்ந்து தெளிந்து உறுதியாக நிலைபெற்ற பெருந்தவத்தோருள்ளத்தின் கண்ணே ஊற்றெடுத்துப் பரந்து கசியும் படி அண்டகோடிகளெல்லாம் நின்று பரந்தன.

     (வி - ம்.) ஏனைய முக்கூற்றுப் புறச்சமயங்களும் சிவபெருமான் திருவடி மெய்ம்மையுணராது இடைநின்று முடிவன. அவற்றிற்கு ஒப்பு சில ஆறுகள் கடலிற்போய்க் கலவாது, இடையே நின்று விடுவனவாகும்.

(11)
நடக்கினும் ஓடினும் நிற்கினும் வேறொரு நாட்டமின்றிக்
கிடக்கினுஞ் செவ்வி திருக்கினும் நல்லருட் கேள்வியிலே
தொடக்கும்என் நெஞ்சம் மனமற்ற பூரணத் தொட்டிக்குளே
முடக்குவன் யான்பர மானந்த நித்திரை மூடிடுமே.
    (பொ - ள்.) நடந்தாலும், ஓடினாலும், நின்றாலும் பிறிதோர் எண்ணம் சிறிதும் இன்றி, கிடந்தாலும், செம்மையாக இருந்தாலும், சித்தாந்தச் செல்வர்பால் கேட்கும் நல்லருட்கேள்வியில், எளியேனுடைய நெஞ்சம் கட்டுப்பட்டு அமைந்து நிற்கும்; அடியேன் மன மிறந்த முழுநிறைவாந் தொட்டிக்குள் முடங்கிக் கிடப்பின், அப்பொழுது பேரின்பப் பேறுறக்கம் எளியேனை வந்து மூடிக்கொள்ளும்.

(12)
எண்ணாத தெண்ணிய நெஞ்சே துயரொழி என்னிரண்டு
கண்ணே உறங்குக என்னாணை முக்கட் கருணைப்பிரான்
தண்ணார் கருணை மவுனத்தி னால்முத்தி சாதிக்கலாம்
நண்ணாத தொன்றில்லை யெல்லா நலமு நமக்குளவே
    (பொ - ள்.) மனமே! ("ஒருபொழுதும் வாழ்வதறியார் கருதுப, கோடியுமல்ல பல") எண்ணத்தகாத எண்ணங்களை இடையறாது அளவிறப்ப எண்ணி எய்தும் துன்பத்தினின்று நீங்குவாயாக; என்னிரு கண்களே! கவலையின்றி நன்றாக உறங்குவாயாக; என்மேல்