பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

469

"நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய்
 மாயப் பிறவி உன்வசமே வைத்திட் டிருக்கும் அதுவன்றி
 ஆயக் கடவேன் நானோதான் என்ன தோவிங் கதிகாரம்
 காயத் திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே.
- 8. குழைத்தபத்து, 8,
(51)
சும்மா இருக்கச் சுகமுதய மாகுமே
இம்மாயா யோகமினி ஏனடா - தம்மறிவின்
சுட்டாலே யாகுமோ சொல்லவேண் டாங்கன்ம
நிட்டா சிறுபிள்ளாய் நீ.
     (பொ - ள்.) உலகியற் பயனை விரும்பி யோகநிட்டையிலிருக்கும் சிறு பிள்ளையாகிய நீ, மனமிறவாத இம் மாயாகாரிய உலக வேட்கையினால் செய்யும் இவ்வியோகத்தை விட்டொழிப்பாயாக; வேறுபாடற்ற உணர்வுநிட்டை சுட்டறிவினால் வரத்தக்கதோ? அது சொல்ல வேண்டா; சும்மாவிருத்த லெனப்படும் சிவனே என்றிருப்பதால் அழியாப் பேரின்பம் உண்டாகும்.

(52)
நீயற்ற அந்நிலையே நிட்டையதில் நீயிலையோ
வாயற் றவனே மயங்காதே போயற்
றிருந்தாலும் நீபோகாய் என்றுமுள்ளாய் சும்மா
வருந்தாதே இன்பமுண்டு வா.
     (பொ - ள்.) மனமாகிய நீ அடங்குத லெனப்படும் அற்ற நிலையிலே கொள்ளப்படும் யோகத்திடத்திலும் நீ யில்லாம லில்லையே. மவுனநிலை கைவந்தவனே, மயக்க மில்லாமல் வருவாயாக. சிறிதும் வருந்த வேண்டா. மூதறிவு நிலையிலும் பேரின்பம் உண்டு; அம் மனம் அதற்குத் துணையாகவும் நிற்கும்.

     (வி - ம்.) இவ்வுண்மை வருமாறு :

"மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை
 ஆயஆ ருயிரின் மேவும் மருளெனில் இருளாய் நிற்கும்
 மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை
 ஆயஆ ருயிரின் மேவும் அருளெனில் ஒளியாய் நிற்கும்."
- சிவப்பிரகாசம், 70
(53)
வாவாவென் றின்பம் வரவழைக்குங் கண்ணீரோ
டாவாவென் றேயழுத அப்பனே - நீவாடா
எல்லாம் நமக்கெனவே ஈந்தனையே ஈந்தபடி
நில்லாய் அதுவே நிலை.
     (பொ - ள்.) (மௌனகுரு மாணவனை நோக்கிக் கூறுமறை மொழி) பேரின்பப் பெரும் பேற்றை வருவாயாக! வருவாயாக!