பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

578
எனக்கினியார் உன்போலும் இல்லையென்றால் யானும்
உனக்கினியா னாகா உளவேன் பராபரமே.
     (பொ - ள்) அடியேனுக்கு மாறாத இன்பந்தந்தருளும் இனியார்1 தேவரீரை யல்லாமல் பிறரெவரும் இலரெனின், ஏழையேன் நின்திருவடிக்கு இனியனாகாதவாறு எவ்வாறு? அதற்குரிய வழிவகைகளை நவின்றருள்வாயாக.

(278)
 
அண்டபிண்டங் காணேன் அகமும் புறமும்ஒன்றாக்
கண்டஎன்னை நீகலந்த காலம் பராபரமே.
     (பொ - ள்) திருவருளால் அடியேன் தேவரீரை உள்ளும் புறம்பும்2 ஒருதன்மையாக உணர்வின்கண் கண்டு கும்பிட்டதும், தேவரீர் எளியேனிடத்து ஒன்றாய் வேறாய் உடனாய்ப் புணரும் மெய்ப்புணர்ப்பு மேலோங்கியது. அதன்பின் அண்டபிண்டங்களாகிய உலகு உடல்களின் தோற்றங் கண்டிலேன்.

     (வி - ம்.) அண்ட பிண்டங்களின் தோற்றங் காணாமை அவையின்மையானன்று; அவற்றான் வரும் பயனேதும் நோக்கி நாடாமையான் என்க. "மரத்தை மறைத்தது" என்னும் திருமந்திரத்திருப் பாட்டுக்கும் இதுவே பொருளென்ப.

(279)
 
எத்தனையோ கோடி யெடுத்தெடுத்துச் சொன்னாலுஞ்
சித்தம் இரங்கிலைஎன் செய்வேன் பராபரமே.
     (பொ - ள்) அடியேன் படும்பாட்டைத் தேவரீர்முன் எத்தனையோ கோடிக்கணக்காக எடுத்து எடுத்து விண்ணப்பித்தாலும் நும்திருவுள்ளம் எளியேன்பால் இரக்கங் கொள்ளவில்லை. இனி அடியேன் என் செய்யக் கடவேன்?

(280)
 
அன்றந்த நால்வருக்கும் அற்புதமாய் நீயுரைத்த
தொன்றந்த வார்த்தையெனக் குண்டோ பராபரமே.
     (பொ - ள்) அந்நாளில் சிறப்பாகச் சொல்லப்படும் முனிவர்நால்வருக்கும் அறிவுறுத்தியருளிய செம்பொருட்டுணிவின் பெருமொழியாகிய சித்தாந்த மகாவாக்கியமாகிய "சிவ சிவ" என்னும் தனித் தமிழ்மந்திரத் திருமொழி அடியேனுக்குத் திருவருளால் கிட்டுமோ?

(281)
 
அப்பனென்றும் அன்னையென்றும் ஆரியனென் றும்உனையே
செப்புவதும் உன்னிலையின் சீர்காண் பராபரமே.
     (பொ - ள்) ஆருயிர்கட்குத் தந்தையாகவும் தாயாகவும்,3 தக்க ஆசானாகவும் தேவரீரையே அனைவரும் எடுத்து மொழிவது, தேவரீர்

 
 1. 
'என்னிலாரும்.' 5. 21 - 1.
 2. 
'கொள்ளுங்கில்லெனை.' 8. திருச்சதகம், 46.
 3. 
'ஈன்றாளுமாய்.' 4, 95 - 1.