பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

579
அங்ஙன நின்றும் திருவருள் புரிவதால் அம் மொழி ஏற்றுரையன்று இயல்புரையேயாம். ஏற்றுரை - உபசாரம். இயல்புரை - உண்மை.

(282)
 
கட்டுங் கனமும்அந்தக் காலர்வரும் போதெதிர்த்து
வெட்டுந் தளமோ விளம்பாய் பராபரமே.
     (பொ - ள்) உறவு முதலிய மக்கட் கூட்டமும், ஆட்சி முதலியவற்றால் ஏற்படும் பெருமையும், நமன்தூதர் நண்ணும்போது அவர்களை வெட்டி வீழ்த்தும் படையாகுமோ? (ஆகாதென்க.) ஆயின் திருவருட்டுணையால் நமன் தூதர் சிவனடியாரை நண்ண அஞ்சுவர். இவ்வுண்மை வருமாறு :

"கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலின்
 ஆற்றல் தலைப்பட் டவர்க்கு"
- திருக்குறள், 269.
(283)
 
பேசாத மோனநிலை பெற்றன்றோ நின்னருளாம்
வாசாம கோசரந்தான் வாய்க்கும் பராபரமே.
     (பொ - ள்) திருவருளால் வாயடங்குதலாகிய மவுனநிலை கை கூடினால் அல்லவா, மாற்றம் மனங்கழிய நிற்கும் நின்திருவடிநிலை கைகூடும்?

(284)
 
கற்றாலுங் கேட்டாலுங் காயமழி யாதசித்தி
பெற்றாலும் இன்பம்உண்டோ பேசாய் பராபரமே.
     (பொ - ள்) உலகியல் நூலனைத்தும் நுணுகிக் கற்றாலும், கற்றவர் சொல்லக் காதலித்துக் கேட்டாலும், மூச்சுப்பயிற்சியால் உடம்பினை அழியவிடாமல் நெடுநாள் பேணி வைத்திருந்தாலும், இவற்றால் நின் திருவடிக்கண் திருவருளால் இரண்டறக்கலக்கும் மெய்ப் புணர்ப்பு நிலை கைவருமோ? (கைவராதென்க.)

(285)
 
கண்டவடி வெல்லாங் கரைக்கின்ற அஞ்சனம்போல்
அண்டமெல்லாம் நின்னருளே அன்றோ பராபரமே.
     (பொ - ள்) கருநிறம் பொருந்திய அஞ்சனமை தன்னால் தீண்டப்பட்ட பொருள்களனைத்தையும் தன்நிறமாக்கும் தன்மை போன்று, திருவருளால் கலக்கப்பட்ட அண்டங்களெல்லாம் நின்திருவருள் வண்ணமாமன்றோ?

(286)
 
தன்செயலால் ஒன்றுமிலை தானென்றால் நான்பாவி
நின்செயலால் நில்லா நினைவேன் பராபரமே.
     (பொ - ள்) (ஆருயிர்களால் செய்யப்படும் அனைத்துச் செயல்களும் திருவருளின் தூண்டுதலாலும் துணையினாலும் செய்யப்படுவன. அதனால்) எளியேன் செயலால் ஆவது யாதொன்றுமில்லையெனத் தெளியக் கண்டும், கொடியேனாகிய யான் நின்செயலாக நில்லாமல் வேறு நினைவு கொள்வது எதன் பொருட்டு?

(287)