சோதியே நந்தாச் சுகவடிவே தூவெளியே | ஆதியே என்னை அறியவைத்தால் ஆகாதோ. |
(பொ - ள்) இயற்கைப் பேரொளிப் பிழம்பே, அழிவில்லாத பேரின்பப் பெருவடிவே, தூய அறிவுப் பெருவெளியே. முழு முதலே நின்திருவடியை அடியேனுக்கு அறிய வைத்தால் ஆகாதோ?
(8)
நேசஞ் சிறிதுமிலேன் நின்மலனே நின்னடிக்கே | வாசஞ் செயஇரங்கி வாவென்றால் ஆகாதோ. |
(பொ - ள்) வேண்டத் தக்க அன்பு ஒரு சிறிதும் இல்லேன்; மலமணுகாத தூயோனே, நின்திருவடியில் உறையுமாறு இரக்கங்கொண்டு வாவென்று அழைத்தருளினால் ஆகாதோ?
(9)
என்னறிவுக் குள்ளே இருந்ததுபோல் ஐயாவே | நின்னறிவுள் நின்னுடன்யான் நிற்கவைத்தால் ஆகாதோ. |
(பொ - ள்) அடியேனுடைய உணர்வினுக்குள்ளே தேவரீர் இருந்தருளிய தன்மைபோல், முதல்வனே எளியேன் நின் அறிவினுக்குள் அடங்கிப் புணர்ப்பாக நிற்கும்படி செய்தருளினால் ஆகாதோ? புணர்ப்பு - அத்துவிதம்.
(10)
ஆதிப் பிரானேஎன் அல்லல் இருளகலச் | சோதிப்ர காசமயந் தோற்றுவித்தால் ஆகாதோ. |
(பொ - ள்) ஆதியை உடைய பெருமானே, ஏழையேன் படும் துன்பங்களெல்லாம் பழமல இருளால் வருவன. அதனால் அவ்விருள் அற்று ஒழியும்படி பேரொளிப் பெருவிளக்காய் அடியேனுக்குத் தோன்றும்படி காட்டியருளினால் ஆகாதோ?
(11)
ஆசைச் சுழற்கடலில் ஆழாமல் ஐயாநின் | நேசப் புணைத்தாள் நிறுத்தினால் ஆகாதோ. |
(பொ - ள்) மண்ணுலக ஆசையாகிய சுழி பொருந்திய பிறவிப் பெருங்கடலுள் 1 அடியேன் ஆழ்ந்துவிடாமல் ஐயனே அக் கடலை நீந்துதற்குரிய நின்திருவடிப் புணையைத் தந்தருளி அதனை நிறுத்தினாலாகாதோ?
(12)
பாசநிக ளங்களெல்லாம் பஞ்சாகச் செஞ்செவே | ஈசஎனை வாவென் றிரங்கினால் ஆகாதோ. |
(பொ - ள்) பாசத் தொடர்பான விலங்குகளெல்லாம் அற்றுப் பஞ்சாகப் பறந்துபோம்படி உடையவனே செவ்வையாக எளியேனை வாவென்றழைத்து இரங்கினால் ஆகாதோ?
(13)
1. | 'தனியனேன்.' 8. திருச்சதகம், 27. |
" | 'பிறவிப்.' திருக்குறள், 10, |