பக்கம் எண் :

 

       காப்புப் பருவம்

129

கருங்கடலைக் கைநீத்துக் கொளஎளிது மூந்நீர்க்
    கடற்கரையின் நொய்மணலை எண்ணிஅள விடலாம்
பெருங்கடல்மேல் வருந்திரையைஒன் றிரண்டென் றெண்ணிப்
    பிரித்தெழுதிக் கடைஇலக்கம் பிரித்துவிடல் ஆகும்
கருங்கடலின் மீனைஅள விடல்ஆகும் வானத்
    தாரகையை அளவிடலாம் சங்கரன்தாள் தமது
சிரங்கொள்திருத் தொண்டர்புரா ணத்தைஅள விடநம்
    சேக்கிழார்க் கெளிதலது தேவர்க்கும் அரிதே

என்று சிறப்பித்துப் பாடியுள்ளார்.

    சேக்கிழார் வாக்கில் உண்மை மொழி மிளிர்தல் காணலாம்.  எல்லாம் தாம் அறிந்து மொழிவதாகக் கூறிற்றிலர்.  தமக்கு எது தெரிந்ததோ அதை மட்டும் அவர் தெரிந்து கூறியவர்.  இதற்கு அவரது மொழிகளே சான்றாக இருக்கின்றன.  கண்ணப்பர் வரலாற்றைக் கூறத் தொடங்கும் போது,

        உம்பர்பிரான் காளத்தி
            உத்தமர்க்குக் கண்ணப்பு
        நம்பெருமான் செய்தபணி
            நாம்தெரிந்த வாறுரைப்பாம்

என்றனர்.

    இவ்வாறே ஆனாயநாயனார் வரலாற்றைக் கூறும்போது  “ மன்னும் ஆனாயர் செய்கை அறிந்தவா வழுத்தல் உற்றேன் “  என்று பாடியுள்ளார்.  இதனால் இவர் உண்மையினை ஒளிக்காமல் கூறியவர் என்பது தெளிவு.  இதனால் இவரை  ‘ மெய் அறிஞர் ‘  எனல் மெய்ம்மைதானே ! 

    கதிர் என்பது சினையாகு பெயராய்ச் சூரியனை உணர்த்தும்.  சூரியன் எல்லாராலும் அறியப்பட்டவன்.  அவனைப் போலச் சேக்கிழார் குடியில் பலர் தோன்றினும் இவரே அக்குடியின் விளக்கமாய் இருந்தமையின் இவரைக்  “ குலக் கதிர் “  என்றனர்.  சேக்கிழார் குடியில் பலர் சேக்கிழார் என்ற