பக்கம் எண் :

நம

134

             காப்புப் பருவம்

    நம்பி ஆண்டார் நம்பிகள் சேக்கிழார்க்குக் காலத்தால் முற்பட்டவர்,  திரு பிள்ளை அவர்கள் திருத்தொண்டர் புராணசாரம் என்னும் நூலைத் தழுவியும் மேலே கூறிய கருத்துக்கு இசைந்துள்ளார்.  அப்பாடல்,

    மெய்அறிவாம் கபிலரொடு பரணர் ஆதிப்
        புலவோர்பொற் பார்கலைகள் பொருந்தஓதிச்
    செய்யுளிடை வளர்ஆசு மதுரம் நல்ல
        சித்திரம்வித் தாரமெனத் தெரிக்கும் செம்மை
    மெய்யுடைய தொடைகள் எல்லாம் மன்றுள் ஆடல்
        மேவியகோன் இருதாளில் விரவச் சாத்திக்
    கையடைஅஞ் சலியினராய் அருளால் மேலைக்
        கருதரிய அமருலகம் கைக்கொண் டாரே

என்பது.

    புராண சார ஆசிரியர் சேக்கிழாருக்கப் பிற்பட்டவர்.  இவ்விரு பெருமக்கள் கருத்தை ஒட்டியே,  “ இலக்கியம் புகல் இலக்கண மெய்ஞ்ஞான போத நூல் ஆதியா யாவும் அரில்தப உணர்பு புரகரனையே துதித்து மெய்யடிமை வாய்ந்த சங்கப் புலவர் “  என்றனர்.  இனிச் சேக்கிழார் பெருமானார் பொய்யடிமைஇல்லாத புலவர் யாவர் என்பதை அறிவித்திருப்பதை ஈண்டு இன்றியமையாது கண்டல் வேண்டும்.  பெரிய புராணத்தில் பொய்யடிமை இல்லாத புலவர் புராணத்தைக் கூறவந்தபோது, சேக்கிழார் மூன்று செய்யுட்களில் பாடியுள்ளனர்.  அவற்றுள் இரண்டு பாடல்கள்  “ அவர் யாவர் “  என்பதை அறிவிப்பன.  அவை,

    செய்யுள்நிகர் சொல்தெளிவும்
        செவ்வியநூல் பலநோக்கும்
    மெய்யுணர்வின் பயன்இதுவே
        எனத்துணிந்து விளங்குஒளிர்
    மையணியும் கண்டத்தார்
        மலர்அடிக்கே ஆளானார்
    பொய்யடிமை இல்லாத
        புலவர்எனப் புகழ்மிக்கார்