பக்கம் எண் :

New Page 1

 

       காப்புப் பருவம்

149

என்று பாடி இருப்பதைக் காணும்போது அவ்வாற்றின் வெள்ளப் போக்குக் கண்கள் விரும்பிக் காணும் நிலையில் உள்ளது என்பது உண்மை என உறுதிப்படுத்தப்படும். இது குறித்தே ஈண்டு,  “ ஆடுவார் கண் பெட்பப் பெருக்கெடுத்து வரு பாலாற்று அலை பிறங்குவளை வீச “  எனப்பட்டது.  கரைகளில் அலைகள் சங்குகளை வீசும் என்பதைச் சம்பந்தர்,  “ சங்கம் தரளம் அவைதாம் கரைக்கெற்றும் “ என்று பாடுதல் காண்க.

    நாட்டின் நீர் வளத்திற்கு அறிகுறியாக வளைகள் மிகுதியாக இருத்தல் இயல்பு.  இதனை வில்லிபுத்தூரார், “நந்து ஊரும் புனல் நாடு” என்று கூறியுள்ளனர்.  வளைகளே அன்றி ஆறுகளும் கரை ஓரத்தில் உள்ள மரங்களின் உச்சியைத் தொட்டு ஓடும் எனப் புலவர்கள் உயர்வு நவிற்சி அணி தோன்றப் பாடுதல் உண்டு.  புகழேந்தியார், “பைங்கமுகின் கூந்தல்மேல் கங்கைக் கொழுந்தோடும்” என்று கூறுதல் காண்க.  இம்முறையினைக் கருதித்தான், “துறைக்கு அண்ட நிமிர் கந்தி அஞ்சோலை தவழ்தரும்” எனப்பட்டது.

    தொண்டை நாட்டின் வளம் நூல்களில் பலவாறு கூறப்பட்டுள்ளது.  இந்நாட்டின் வளத்தைக் கூறவல்லவர் சேக்கிழார் ஒருவரே அன்றி, வேறு ஆகார் என வடநூற் கடலும் தென்னூற் கடலும் நிலை கண்டுணர்ந்த சிவஞான முனிவர்,

    திருத்தொண்டை நன்னாட்டு நானிலத்தைந்
       
திணைவளமும் தெரித்துக் காட்ட
   
மருத்தொண்டை வாய்ச்சியர்சூழ் குன்றைநகர்
       
குலக்கவியே வல்லான் அல்லால்
   
கருத்தொண்டர் எம்போல்வார் எவ்வாறு
       
தெரிந்துரைப்பார் கலந்தார்க் கின்பம்
   
மருத்தொண்டர் அணியில்அவை ஒன்றோடொன்
       
றியந்தனவும் ஆங்காங் குண்டால்

என்று குறிப்பிட்டுள்ளனர்.