பக்கம் எண் :

இவ

 

       காப்புப் பருவம்

163

    இவ்விரி நூலை  “உலகெலாம் அறியத் தெருட்டினார் “  என்பது.   “ மன்றுளார் அடியார் வான்புகழ் நின்றது எங்கும் நிலவி உலகெலாம் “ என்றும்  “ மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்கப்பால் முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும், நாவேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும், நல்தொண்டர் காலத்து முன்னும் பின்னும் “  என்றும்  சேக்கிழார் அறிவித்திருப்பதால் எல்லா உலகங்கட்கும் இது பொருத்தமான நூல் என்பதும், உலகறியும் பெருமைக் குரியதும் இதுவே என்பதும் பெறப்படுகின்றன.

    சேக்கிழார் பெருமானார் பேராசிரியர்.  பேராசிரியர் என்பதால்தான் பெரிய புராணமாம் அப்பெரு நூலை இயற்ற முடிந்தது.  அநபாய சோழனுக்கும் உணர்த்த முடிந்தது.  ஆகவே, அவரை,  “ குரவிற்கு அமைய “  என்றனர்.  ஆசிரியர்கள்,  “ செங்குவளை மலர் அணிவர் “  என்பது மரபு.  ஈண்டுச் சேக்கிழார் அநபாயனுக்குக் குருவாக அமைந்தமையின்,  “ குவளை மலர் புனைந்தது பொருத்தமே.   “ சமணர் பொய்ந்நூல் இது மறுமைக்கு ஆகாது.  இம்மைக்கும் அற்றே.  வளம் மருவுகின்ற சிவ கதை இம்மைக்கும் மறுமைக்கும் உறுதி “  என்று மன்னர்மன்னனுக்கு மதி அமைச்சராம் சேக்கிழார் கூறினார் எனில், இஃது அமைச்சர் பண்பில் நின்று பேசியது அன்று ;  ஆசிரியர் நிலையில் நின்று அறிவித்ததாகும்.  இது குறித்தே திரு பிள்ளை அவர்கள்,  “ தெருட்டு குரவில் “  என்றனர்.  அநபாயனும் இவரைக் குருவாகக் கொண்டிலன் எனில், இவர்க்கு வெண்சாமரை வீசியிறான்.  அநபாயன் கவரி வீசியதைச் சேக்கிழார் புராணம்,  “ சேவையர் காவலரை முறைமை பெற ஏற்றி அரசனும் கூட ஏறி முறைமையினால் இணைக் கவரி துணைக்கரத்தால் வீச “ என்று மொழிகிறது.  இங்ஙனம் வீசியது குறித்து மன்னன் மகிழ்ந்ததை,  “ இதுவன்றோ நான் செய்த தவப்பயன் “ என்றும் கூறுகிறது.

    குருவாக அமைகிறவர்கள் குவளை மலர் அணிதல் மரபாகும்.  வேளாளர்கட்கும் இம் மலர்மாலையே உரியது.