பக்கம் எண் :

 

       காப்புப் பருவம்

179

        அடியேன் பெற்ற மக்கள்இவர்
            அடிமை யாகக் கொண்டருளிக்
        கடிசேர் மலர்த்தாள் தொழுதுய்யக்
            கருணை அளிக்க வேண்டும்எனத்
        தொடிசேர் தளிர்க்கை இவர்எனக்குத்
            தூய மக்கள் எனக்கொண்டப்
        படியே மகண்மை யாக்கொண்டார்
            பரவை யார்தம் கொழுநனார்

என்று பாடி அறிவித்துள்ளனர்.

    மேலும், சுந்தரர் அவர்களை மகவாய் ஏற்றுக்கொண்டு இன்புற்றதையும் அருண்மொழித் தேவர்,

        கோதை சூழ்ந்த குழலாரைக்
            குறங்கின் வைத்துக் கொண்டிருந்து
        காதல் நிறைந்த புதல்வியராம்
            கருத்துள் கசிவாம் அணைத்துச்சி
        மீது கண்ணீர் விழமோந்து
            வேண்டு வனவும் கொடுத்தருளி
        நாதர் கோயில் சென்றடைந்தார்
            நம்பி தம்பி ரான்தோழர்

என்று பாடி யருளினர்.

    இவை சேக்கிழார் கூற்றுக்களே ஆயினும், சுந்தரரே தம் திருவாக்கால் தம்மை,  “ சிங்கடி அப்பன் “   “ வனப்பகை அப்பன் “  என்று பாடியும் அறிவித்துக் கொண்டனர்.  இதனை முறையே திருநாட்டியத்தான்குடிப் பதிகத்தில்,  “ சோடார் பூங்குழல் சிங்கடி அப்பன் “  என்றும், திருநாட்டுத் தொகைப் பதிகத்தில்,  “ வனப்பகை அப்பன் வன்றொண்டன் “ என்றும் பாடியிருத்தலைக் காணவும்.

    இன்னோரன்ன காரணங்களால் தாம் இருவரை மணந்ததற்கு ஏற்ப இரு பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்த தந்தையர் ஆயினும், இவ்விரு பெண்களும் பரவையார்க்கும், சங்கிலியார்க்கும் பிறவாதவர்கள் ஆதலால், திரு பிள்ளை