பக்கம் எண் :

 

       காப்புப் பருவம்

183

        பாரும் அறிய யான்ஆள
            உரியான் உன்னை எனைஇரந்தான்
        வார்கொள் முலையாய் ! நீஅவனை
            மணத்தால் அணைவாய் மகிழ்ந்தென்றார்

இப்பாடலாலும் இவர் இன்தொண்டர் என்பது பெறப்படுகிறது.

    “ பத்தராய் “  என்ற பாடலில் உள்ள ஆத்தனை பேரும் துதிக்கப்பட வேண்டியவர்கள்.  ஆதலின்,  “ தழுவித் துதிக்க வைத்தவர்கள் “  எனப்பட்டனர்.  இவர்கள் தொகையடியார்கள்.  ஒவ்வொரு தனி அடியார்கள் அல்லர்.  இப்பாடலில் குறிப்பிடப்பட்ட ஏழுதொகையடியார்கள் பத்தராய்ப்பணிவார், பரமனையே பாடுவார்கள், சித்தத்தைச் சிவன்பால் வைத்தவர்கள், திருவாரூர்ப் பிறந்தவர்கள், முப்போதும் திருமேனி தீண்டுபவர்கள், முழுநீறு பூசியவர்கள். அப்பாலும் அடிச் சார்ந்தவர்கள்.  எழுவர் என்னாது எழுவகையுள்ளார், என்று கூறி இவர்கள் தொகையடியார்கள்.  என்பதை நன்கு உணர வைத்தார்.  இவர் திருவடிகள் எல்லாப் பேறுகளையும் பெறுதற்கும் வழியாக இருத்தலின் “ பொன்பதம் “ என்றனர்.  இதனால்தான் சேக்கிழார், அடியார் திருவடிகளைத் தலைமேல் வைப்பாம் என்று கூறிக்கொண்டே செல்வர்.

    இத்தொகையடியார்கள் தனியடியார்களைப் போல் வரலாற்றுக் குறிப்புடையவர்கள் அல்லர்.  இவர்களைப் பொது வகையில் பற்றிக் கூறவேண்டுமானால் கீழ் வருமாறு கூறலாம்.

    பத்தராய்ப் பணிவார் என்பவர்கள் அடியார்களைக் கண்டு ஆனந்தம் அடைவர்.  அவர்பின் சென்று தொண்டு செய்ய விரும்புவர்.  அவர்களிடம் இன்மொழி பேசுவர்.  சிவபூசை செய்பவர்களைப் பார்த்துப் பார்த்து இன்புறுவர்.  தாம் செய்யும் எச்செயல்களையும் சிவார்ப்பணமாகவே செய்வர்.  சிவபெருமான் சரித்திரங்களைக் கேட்பர்.  ஈசனை எண்ணி எண்ணி உருகுவர்.  கண்ணீர் வடிப்பர்.  உடல் சிலிர்ப்பர்.  எந்நிலையிலும் இறைவனை