பக்கம் எண் :

 

       செங்கீரைப் பருவம்

235

ஞானத்தைக் கொடுப்பது என்பதாம்.  நிருவாணம்- மோட்சம், முத்தி, முத்தி-மோட்சம், திருமுகம்-கடிதம்,  உய்த்திடப்  பெற்ற-கொண்டுவந்து  கொடுக்கப் பெற்ற,   நிலையது-இருப்பிடம், உமாபதிசிவம்-உமாபதி சிவாசாரியார், அளவா-அளவிட முடியாத, மெய்ஞ்ஞானம்-தத்துவஞானம், அற்புதம்-வியக்கத்தக்க செயல்கள், நேயம்-அன்பு, விருப்பம், இம்மை-இப்பிறப்பில் அனுபவிக்கும் இன்பம், மறுமை-மறு பிறப்பில் அனுபவிக்கும் இன்பம், மான்மியம்-பெருமை.

    விளக்கம் :  தில்லைச் சிதம்பரத் தலத்துள் திருவம்பலம் பொன்னால் வேயப்பட்டது.  இங்ஙனம் இது பொன்னால் வேயப்பட்டது என்பதற்குரிய குறிப்புக்கள் பல சரித்திர வரலாறுகளாலும், தேவாரத் திருமுறைகளாலும் அறியப்படுகின்றன.  திருப்புறம்பயக் கல்வெட்டினால் விக்கிரம சோழவள நாட்டின் அரசரான குலோத்துங்கர் சிதம்பரப் பேரம்பலம் பொன் வேய்ந்தமை புலனாகிறது.   “ சேயவன் திருப்பேரம்பலம் செய்ய தூய பொன்னணி சோழன் “ என்று சேக்கிழார் கூறியுள்ளதையும் காணக.  அவரே மீண்டும், “ தில்லைத் திருவெல்லை பொன்னின் மயமாக்கிய வளவர் போர் ஏறு “  என்று பாடியுள்ளதையும் காண்க.  இதனால் சேக்கிழார் பெருமானது வரலாற்றுப் புலமையும் நன்கு புலனாகிறது.  இவற்றை எல்லாம் உட்கொண்டே.  “ தூய ஒளி இருள்தபு பொன் மாளிகைத் தில்லை “  என்று கூறப்பட்டது.

    பெத்தான் சாம்பான் ஓர் ஆதித் திராவிடன்.  அவனுக்கு நிர்வாண தீட்சை செய்து முத்திப் பேறு அருளத் தில்லை நடராஜப் பெருமான் ஒரு கடிதம் உமாபதி சிவாசாரியாருக்கு எழுதி அனுப்பினர்.  அத் திருமுகப் பாசுரம்.

    “  அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங்
       குடியார்க்கு எழுதிய கைச்சீட்டு-படியின்மிசை
       பெத்தான்சாம் பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து
       முத்தி கொடுக்க முறை “ 

என்பது.