பக்கம் எண் :

இத

236

             செங்கீரைப் பருவம்

    இத்திருமுகம்  பெற்ற  உமாபதி  சிவாசாரியார்  இறைவன்  கட்டளையினைச் சிரமேற்கொண்டு, பெத்தான் சாம்பானுக்கு நிர்வாண தீட்சை செய்து முத்தி கொடுத்தார்.  தீட்சையாவது முத்திக்கு ஏதுவாகிய தீட்சை.

    ஞானகுருவானவர் மாணவனது பரிபக்குவ நிலைகளை அறிந்து கன்மங்களைப் போக்கி, அவனது ஆன்மாவை இறைவனது திருவடிகளில் ஒடுக்கி, மாணிக்கத்தைச் சேர்ந்த படிகம் போலத் தற்போதம் ஒடுங்க, திருவருள் குணங்கள் விளங்கச் சிவானந்தம் மேவிடச் செய்வர்.  இவ்வாறு செய்யப்படுவதே இங்குக் கூறப்பட்ட நிர்வாண தீட்சை என்பது.  இந் நிர்வாண தீட்சை இரண்டு வகைப்படும்.  ஒன்று சத்தியோ நிர்வாணம், மற்றொன்று அசத்தியோ நிர்வாணம்.  முன்னது தீட்சை முடிவிலேயே மோக்கம் தருவது.  பின்னது தேக முடிவில் வீட்டின்பம் தருவது.

    பெத்தான்சாம்பான் தில்லைக் கூத்தப்பெருமானிடம் அன்புடைய ஓர் ஆதித் திராவிடன்.  கோயிலுக்கு விறகு வெட்டிக் கொணர்ந்தளிக்கும் தொண்டு புரிந்தவன்.  அவனது பக்குவம் கண்டு நடராசப் பெருமான் உமாபதி சிவத்திற்குக் கடிதம் அனுப்பி அவனுக்கு முத்தி கொடுக்கக் கட்டளையிட்டார்.  உமாபதி சிவம் அங்ஙனமே செய்தனர்.  அவனது மனைவி அரசனிடம் சாமியார் தன் கணவனைக் கொன்று விட்டார் என்று முறையிட்டபோது, அரசனே நேரில் வந்து உமாபதிசிவத்தைக் கேட்க, அவர் நடந்ததைக் கூறித் தீட்சையின் பெருமையை விளக்கி அவன் முன் முள்ளிச் செடிக்கும் சட்சுதீட்சை செய்து முத்தி கொடுத்தார்.  இதுவே பெத்தான்சாம்பான் முத்தி பெற்ற வரலாறு.

    கொற்றவங்குடி உமாபதி சிவாசாரியார் அந்தணர் மரிபினராக இருந்தும், ஆதி திராவிட மரபினனான பெத்தான் சாம்பானுக்கு நிர்வாண தீட்சை செய்து முத்தி பெறுமாறு செய்த செயலை உற்று நோக்கும்போது, உண்மை அந்தணர்களின் இயல்பு இன்னது என்பதை,