பக்கம் எண் :

New Page 1

238

             செங்கீரைப் பருவம்

குரவர்கள் ஸ்ரீ மெய் கண்ட தேவர்.  ஸ்ரீ அருள்நந்திசிவம், ஸ்ரீ மறைஞான சம்பந்தர், ஸ்ரீ உமாபதி சிவாசாரியர்.

    ஸ்ரீ உமாபதி சிவாசாரியாரால் நியமனம் பெற்றவர் ஸ்ரீ அருள்நமச்சிவாயர்.  இவர்பால் தீட்சை பெற்றவர், சித்த மூர்த்திகளாகிய ஸ்ரீ சிவப்பிரகாசர்.  இவர் ஸ்ரீ பஞ்சாட்சர மூர்த்திகள் என்று போற்றப்படும் ஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகளைத் திருவாவடுதுறையில் ஆதீன முதல்வராக நியமித்தனர்.  அதனால் இவ்வாதீனம் ஸ்ரீ பஞ்சாட்சர தேசிகர் ஆதீனம் எனப் பெயர் பெற்று விளங்குகிறது.  ஸ்ரீ மெய் கண்ட நாயனார் முதல் ஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகள் வரையுள்ள இந்த ஆசாரிய பரம்பரை பூதபரம்பரை எனப்படும்.  முன் கூறிய தேவ பரம்பரையும், இப்பூதபரம்பரையும் உபதேச பரம்பரை எனப்படும்.  இதற்கு மேல் விளங்கிவருவது அபிஷேக பரம்பரையாகும்.

    இம்மரபு முறைகளை எல்லாம் உள்ளடக்கியே ஆசிரியர்  ‘ கைலாய அப்பரம்பரை ‘  என்றனர்.  இக் கையலாய பரம்பரையில் இதுபோது திருவாவடுதுறையில் இருபத்தோராவது குருமகா சந்நிதானமாக அருள் செங்கோல் நடத்திக்கொண்டு ஞானதானம், பொருள்தானம் ஆகியவற்றை வரையாது அருள் செய்து கொண்டு சைவசமயத்தை ஓம்பி வரும் பரமாசாரியர் ஸ்ரீ ல ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆவார்.

    இவை அனைத்தையும் உட்கொண்டே,  ‘ நடனநாதர் உமாபதி சிவன் ‘  என்று உமாபதி சிவனார் பெருமையினை ஈண்டுச் சிறப்பித்தனர்.  இவர் சேக்கிழார் வரலாற்றைப் பாடிய அருமையினை  ‘ நினது வரலாறு பாராட்டி அருள்செய ‘  என்று குறிப்பிட்டனர்.  உமாபதி சிவனார் சிறந்த மெய்ஞ்ஞானி.  அந்தண மரபினர்.  அத்தகையவரே சேக்கிழார் வரலாற்றைப் பாடியுள்ளார் எனில், சேக்கிழார் பெருமை அளவிடற்கரியதன்றோ !  அதனால்  ‘ மான்மியம் அடைந்தாய் ‘  என்று ஈண்டும் சிறப்பிக்கப்பட்டார்.  சேக்கிழார் வரலாறு இம்மைக்கும் மறுமைக்கும் ஆதார நிலையது என்றதையும் கூர்ந்து கவனிக்க.