பக்கம் எண் :

264

             செங்கீரைப் பருவம்

        சித்தனே செல்வத் திருப்பெருந் துறையில்
            செழுமலர்க் குருந்தமே வியசீர்
        அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
            அதெந்துவே என்றரு ளாயே

என்ற மணிமொழியாரது மாண்புறு மொழிகளும் குறிப்பிடுவனவற்றால் உணரலாம்.

    யோகமாவது (சகமார்க்கம்) அகப்புறச் செயல்களால் ஆகம முறைப்படி வழிபட்டபின், அகவழிபாட்டால் இறைவனைப் பூசிப்பதாகும்.  அதாவது தியான சமாதிகளான அகத்தொழில் ஒன்றினால் இறைவனது அருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு.  இதனை வாதவூரர் புராணம்,

    முக்கு ணம்புலன் ஐந்துடன் அடக்கி
        மூல வாயுவை எழுப்பிரு வழியைச்
    சிக்கெ னும்படி அடைத்தொரு வழியைத்
        திறந்து தாண்டவச் சிலம்பொலி யுடன்போய்த்
    தக்க அஞ்செழுத் தோர்எழுத் துருவாம்
        தன்மை கண்டருள் தரும்பெரு வெளிக்கே
    புக்க ழுந்தினர் எம்உருப் பெறுவார்
        புவியில் வேட்டுவன் எடுத்தமென் புழுப்போல்

என்று விளக்குகிறது.  சிவஞான சித்தியார்.

சகமார்க்கம் புலனொடுக்கித் தடுத்துவளி இரண்டும்
    சலிப்பற்று முச்சதுர முதலாதா ரங்கள்
அகமார்க்கம் அறிந்தவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்தங்
    கணைந்துபோய் மேலேறி அலர்மதிமண் டலத்தின்
முகமார்க்க அமுதுடலம் முட்டத் தேக்கி
    முழுச்சோதி நினைந்திருத்தல் முதலாக வினைகள்
உகமார்க்க அட்டாங்க யோகம் முற்றும்
    உழத்தலுழந் தவர்சிவன்தன் உருவத்தைப் பெறுவர்

என்று கூறுகிறது.

        ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
        ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்
        தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர்
        ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே