பக்கம் எண் :

3

3.  தாலப் பருவம்

1.      வெண்ணந் துரறி வயிறுளைந்து
           வீற்று வீற்றாக் கருவுயிர்த்த
       வெண்ணித் திலத்தை அரித்தெடுத்து
           வெள்வாய்க் களமர் கரைகுவிக்க
       வண்ணம் துவர்என் றுவமிக்கும்
           வாய்ஓ திமம்நீர் குடைந்தெழுந்து
       மற்றக் குவியல் மேல்இவர்ந்து
           மருவி முதிரா வெயில்காயக்
       கண்ணந் துறஉண் டெழுதரும்அக்
           களமர் மராள முட்டையினைக்
       கதிர்நித் திலமென் றுறக்குவித்தோம்
           கடையேம் மயங்கி எனநாணும்
       தண்ணம் துறைசேர் குன்றத்தூர்த்
           தலைவா தாலோ தாலேலோ
       சகலா கமபண் டிததெய்வச்
           சைவா தாலோ தாலேலோ

    [ அ. சொ. ]  நந்து-சங்கு, உரறி-ஒலித்து, உளைந்து-நொந்து, வீற்று வீற்றா-வரிசை வரிசையாக, கருஉயிர்த்த-தன் கருவை ஈன்ற, நித்திலத்தை-முத்தை, அரித்து-சல்லடை கொண்டு சலித்து, களமர்-உழவர், வண்ணம்-நிறம், துவர்-பவழம், ஓதிமம்-அன்னம், குடைந்து-முழுகி, இவர்ந்து-ஏறி உட்கார்ந்து, மருவி-பொருந்தி, கள்-கள்ளை, நந்துற-செருக்குற, மராள-அன்னத்தின், கதிர்-ஒளியுடைய, கடையேம்-கடைப்பட்டவராயினோம், நாணும்-நாணுதற்குக் காரணமான, தண்ணந்துறை-குளிர்ந்த நீர்க்கட்டம், சகல ஆகம பண்டித-எல்லா ஆகமங்களையும் பயின்ற அறிஞரே.