பக்கம் எண் :

28

             காப்புப் பருவம்

திண்ணனாருக்கு எந்தெந்த வகையில் அலங்கரித்து, வாழ்த்தி அனுப்பினள் என்பதைச் சேக்கிழார் குறிப்பிடும்போது,

    கானல்வரித் தளிர்துதைந்த கண்ணி சூடிக்
        கலை மருப்பின் அரிந்தகுழை காதில் பெய்து
    மானின்வயிற் றரிதாரத் திலகம் இட்டு
        மயிற்கழுத்து மனவுமணி வடமும் பூண்டு
    தானிழிந்து திரங்கிமுலை சரிந்து தாழத்
        தழைப்பீலி மரவுரிமேல் சார எய்திப்
    பூநெருங்கு தோரைமலி சேடை நல்கிப்
        போர்வேடர் கோமானைப் போற்றி நின்றாள்.

என்று பாடியுள்ளனர்.  ஈண்டுத் தேவராட்டி வரவழைக்கப் படுதலும், காட்டு மர இலைகளைச் சூடுதலும், மான் கொம்பினால் செய்த குழைகளை அணிதலும், பலகரை அணிதலும், கத்தூரி பொட்டு இடுதலும், மூங்கில் அரிசி அட்சதை தூவுதலும் வேடர்களின் சம்பிரதாயமாகும்.

சம்பந்தர் திருவாரூரைச் சிறப்பிக்கும்போது

சோலையில் வண்டினங்கள் சுரும்போடு இசைமுரலச்சூழ்ந்த ஆலையின் வெம்புகைபோய் முகில்தோயும் ஆரூர் “

என்றும்  “தெங்குஉலாவு சோலை நீடும் ஆரூர் “  என்றும்  “ செருந்தி ஞாழல் புன்னைவன்னி செண்பகம் செழுங்குரா அரும்பு சோலை ஆரூர் “  என்றும் சிறப்பித்தனர். அவ்வாறே ஈண்டும்  “ கார்கொண்ட சோலை சூழ் ஆரூரர் “  என்றனர்.

    திருவாரூரில் திருக்கோயில் கொண்டிருப்பவர் திருவாரூரர்.  இது சோழ நாட்டில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று.  சோழர்களின் ராஜதானிகளில் இதுவும் ஒன்றாகும்.  இது மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்புடையது.  இங்குள்ள இறைவர் புற்றிடங் கொண்டார்.  வன்மீக நாதர் திருமூலட்டான நாதர் என்றும் பெயர் பெறுவர்.  தேவியார் அல்லியங்கோதை அம்மையார், கமலாம்பாள் என்ற பெயருடன் விளங்குகின்றனர்.  தீர்த்தம் கமலாலயம்.  இங்குத்